Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Wednesday, April 27, 2011

எங்கே நான் சென்று தேடுவேன்

முன் பகுதியின் தொடர்ச்சி ....

அர‌ச‌ன் எங்களை மூன்று நாட்கள் தங்க வைத்து உபசரித்தான். ஒரு நாள் இரவில்
ஆளனுப்பி எங்களை அவனிடம் அழைத்து வரச் செய்தான்.....


----------------------------------------------------------------------------

அருகில் எங்களை அமர வைத்துச் சிறிது நேரம் அளவளாவிய பின் ஆளனுப்பி ஒரு
பெட்டியைக் கொண்டு வருமாறு செய்தான். தங்க வேலைப்பாடுடன் கூடிய‌
அப்பெட்டியைத் திறந்தான். அதற்குள் பல அடுக்குகள் காணப்பட்டன. ஒவ்வொரு
அடுக்கிலும் கருப்பு மற்றும் வெள்ளைத்துணிகளால் சுற்றப்பட்ட சதுர வடிவமான‌
பொருட்கள் காணப்பட்டன. முதல் அடுக்கிலிருந்து எடுத்து கருப்பு நிற சில்க் துணியால் போர்த்தப்பட்டதைப் பிரித்த போது செந்நிறமான ஓவியம் தெரிந்தது. மிக உயரமான,
பெரிய‌ கண்கள், தாடியில்லாத‌ நீண்ட கழுத்து கொண்ட மிக அழகான ஒரு
மனிதனின் உருவம் இருந்தது. அரசன் கேட்டான் 'இது யார் தெரியுமா'.

நாங்கள் தெரியவில்லை என்று சொன்னதும், 'இவர்தான் ஆதம்'. நாங்கள் வியந்து
பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னொன்றைப் பிரித்து 'இது யார் தெரியுமா' என்று
கேட்க நாங்கள் தெரியவில்லை என்று தலையாட்டினோம். இவர்தான் நோவா, நீங்கள்
சொல்லும் நூஹ் நபி. பெரிய தலையுடன் சுருண்ட முடிகளுடன், அடர்ந்த தாடியுடன்,
சிவந்த கண்களுடன் வெண்மை நிறத்துடன் காணப்பட்டார்.

அடுத்ததை எடுத்து 'இது யார் தெரியுதா' என்று கேட்க நாங்கள் இல்லை என்று
சொன்னோம். மிக வெண்மையான தோற்றம், நீண்ட கன்னங்கள், அழகான கண்கள்,
பரந்த நெற்றி, வெள்ளை தாடி, புன்னகை முகத்துடன் காணப்பட்ட‌ உருவத்தை
'இவர்தான் ஆப்ரஹாம்' என்றான்.

அடுத்ததைப் பிரித்து 'இவர் யார் தெரியுமா' என்று எங்களிடம் நீட்டியபோது
அதிர்ச்சியும் பரவசமும் அடைந்து உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. எங்களால்
கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியாமல் அழுதவாறே சொன்னோம்,

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இது எங்களின் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்'. இதைக் கேட்டதும் அரசன் உடனே எழுந்து நின்றான்.
சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் அமர்ந்து கொண்டு கேட்டான்.

'அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர் நீங்கள் சொல்லும் அதே முஹம்மதுதானா' ?

'சந்தேகமில்லை அவர்களேதான், அவர்களை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது' .

ஹெர்குலிஸ் நீண்ட நேரம் அந்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.


பிறகு மீண்டும் ஒவ்வொன்றாய் எடுத்துப் பிரித்து 'இது யார் தெரியுமா' என்று
கேட்க எங்களுக்கு யாரையும் தெரிந்திருக்க வில்லை. இவர்தான் மோசஸ் மற்றும்
அவரது சகோதரர் ஆரோன் பின் இம்ரான், இவர்தான் லூத், இவர்தான் இஸ்ஸாக்,
இவர்தான் ஜேக்கோப், இவர்தான் இஸ்மவேல், உங்கள் நபியின் பாட்டனார், இவர்தான்
டேவிட், இவர்தான் சாலமன் என்று சொல்லிக் கொண்டே வந்து இறுதியில் இவர்தான்
மர்யமின் மகன் ஜீசஸ் என்று முடித்த பின் எங்களை நோக்கி

'கடைசியில்தான் முஹம்மது நபியின் புகைப்படத்தைக் காட்டியிருக்க வேண்டும்,
ஆனால் வரிசைக் கிரமத்தை வைத்து நீங்கள் கடைசிப் படத்தை முகம்மதின் படம்
என்று கணித்துச் சொல்வீர்களோ என்று ஐயப்பட்டதால்தான் இடையிலேயே காட்டினேன்'.

நாங்கள் கேட்டோம், 'எங்கிருந்து தங்களுக்கு இப்படங்கள் கிடைத்தன' ?

'ஆதம் இறைவனிடம் தனக்குப் பிறகு வரும் இறைத்தூதர்களைக் காண்பித்துத்
த‌ருமாறு ஆவலுடன் கெஞ்சிக் கேட்டதால் இறைவன் அவருக்கு இவ் ஓவியங்களை
அனுப்பி வைத்தான். சூரியன் அஸ்தமாகும் பகுதியில் மறைந்து கிடந்த ஆதமுடையப்
பொக்கிஷப் பேழையில் இருந்து இப் பெட்டியை துல்கர்னைன் கொண்டு வந்து
தானியேலிடம் ஒப்படைத்தார்.'

பிறகு ஹெர்குலிஸ் தொடர்ந்து,
'கவனியுங்கள், இறைவன் மீது சத்தியமாக, இந்த என்னுடைய நாட்டை விட்டு
வெளியேறி, (இஸ்லாத்தை ஏற்று), உங்களில் மிக மிகத் தாழ்ந்த ஒருவ‌னின்
அடிமையாக என்னுடைய மீதிக் காலத்தைக் கழிக்க வேண்டாமா என்றுதான்
நானும் ஆசைப்படுகிறேன்' என்று பெருமூச்செறிந்தான்.

எங்களுக்கு நிறையப் பரிசுப் பொருட்களைத் தந்து மிக்க மரியாதையுடன் அனுப்பி
வைத்தான். நாங்கள் மதீனா திரும்பி வந்து நடந்ததையெல்லாம் அமீருல் முஃமினீன்
ஹஜரத் அபூபக்கரிடம் எடுத்துச் சொன்னபோது அவர்களும் அழுதார்கள் சுற்றியிருந்தவர்கள்
அனைவரும் அழுதனர். பிறகு அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்,

(இந்த) ஹெர்குலிஸ் மிக நல்ல‌வன், இவன் விஷயத்தில் அல்லாஹ் நலவை
நாடினால் இவன் (இஸ்லாத்தை) அடைந்து கொள்வான்'.

மேலும் சொன்னார்கள்,

'ரசூலுல்லாஹ் நமக்கு முன்பே சொல்லியிருக்கிறார்கள், கிறிஸ்தவர்களும்,
யூதர்களும், நபியவர்களின் அடையாளத்தை அவர்களுக்குக் கொடுக்கப்
பட்டவைகளிலிருந்து தெரிந்து கொள்வார்கள்'.




சம்பவத்தை அறிவிப்பவர் : ஹஜரத் 'ஹிஷாம் பின் ஆஸ் அமவி (ரலி)' அவர்கள்.


டிஸ்கி: அல்லாஹ் மன்னிக்க வேண்டும். இது ஹதீஸின் நேரடித் தமிழாக்கம்
இல்லை, ஞாபகத்தில் உள்ளதை எழுதியுள்ளேன். ஹதீஸில் ஒவ்வொரு நபியைப்
பற்றியும் வர்ணனை உண்டு. அல்லாஹ்வே மிக அறிந்தவன். வஸ்ஸலாம்.

Wednesday, April 20, 2011

அதிர வைத்த ஆன்மீகச் சொல்

நானும் இன்னொருவரும் பைஸான்டியப் பேரரசின் மன்னனான ஹிர்கலிடம்
அனுப்பப் பட்டோம். ப‌ய‌ண‌த்தினூடே சிரியாவின் ட‌மாஸ்க‌ஸில் உள்ள
'குத்தாஹ்'வின் ஆளுந‌ர் ஜ‌ப‌லா பின் அய்ஹாம் க‌ஸ்ஸானியை முத‌லில்
ச‌ந்தித்தோம். அவ‌ன் அரியாச‌ன‌த்தில் அம‌ர்ந்த‌வாறே சில‌ரை எங்க‌ளிட‌ம்
பேசுவ‌த‌ற்கு அனுப்பி வைத்தான். நாங்க‌ள் சொன்னோம்,

'இறைவ‌ன் மீது ஆணையாக‌, அர‌ச‌னிட‌ம் பேசுவ‌த‌ற்காக ம‌ட்டுமே அனுப்ப‌ப்
ப‌ட்டுள்ளோம். அவனிடம் அனும‌தித்தால் வ‌ந்த‌ விஷ‌ய‌த்தைப் ப‌ற்றிப் பேசுவோம்.
அனும‌தி இல்லையென்றால் வ‌ந்த‌ வ‌ழி திரும்பி விடுவோம். இத‌னைய‌றிந்த‌ ஜ‌ப‌லா
த‌ன்னிட‌ம் வ‌ருவ‌த‌ற்கு அனும‌தி அளித்தான். அவ‌ன் அருகில் சென்ற‌ எங்க‌ளைப்
பார்த்து, 'ம்,சொல்லுங்க‌ள் என்ன‌ சொல்ல‌ப் போகிறீர்க‌ள்' என்றான்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜபலாவை அழைத்தேன். க‌றுப்பு நிற ஆடை
அணிந்திருந்த ஜபலா, 'நான் ஏன் கறுப்பு நிற ஆடை அணிந்திருக்கிறேன் என்று
தெரியுமா. முஸ்லிம்களாகிய உங்களையெல்லாம் இந்த சிரியாவை விட்டு
விரட்டியடிக்காதவரை க‌ருப்பு நிற ஆடையைத் துறக்கப் போவதில்லை என்று
சபதம் செய்திருக்கிறேன்' என்றான்.

அதற்கு நாங்கள் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த நகரம் மட்டுமல்ல‌ முழு நாடும்
எங்களுக்குக் கீழ் வரப் போகிறது இன்ஷா அல்லாஹ். இதைப் பற்றிய முன் அறிவிப்பை
எங்கள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்பே அறிவித்திருக்கிறார்கள். இத‌னைக் கேட்ட ஜபலா,

'நீங்களல்ல அம்மக்கள், எம் நாட்டை எவர்கள் கைப்பற்றுவார்கள் என்றால் அவர்கள்
பகலிலே நோன்பு வைத்து இரவிலே வணக்கம் புரிவார்கள். சரி உங்களின் வணக்க
முறைகளைச் சொல்லுங்கள்' என்றவனிடம் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளின்
முறைகளைச் சொல்லச் சொல்ல அவன் முகம் கறுத்துப் போனது.

பிறகு எங்களை மன்னனிடம் அனுப்பி வைத்தான். மன்னனை நெருங்கிய பொழுது
வாயிற்காவலர்கள் 'நீங்கள் ஒட்டகத்தில் செல்ல அனுமதி இல்லை. நாங்கள் தரும்
துருக்கிக் குதிரையில்தான் உள்ளே செல்ல வேண்டும்' என்றதற்கு 'அல்லாஹ்வின்
மீது ஆணையாக, நாங்கள் வந்த ஒட்டகத்தில்தாம் வருவோம்' என்றோம். இச் செய்தி
மன்னனுக்குத் தெரிந்தவுடன் ஒட்டகத்துடன் வர அனுமதி கிடைத்தது.

சபையோர் புடை சூழ மன்னன் செந்நிறமாய்க் காட்சியளித்தான். அங்கிருந்தோர்
அனைவரின் ஆடைகள்,அங்கிகள்,விரிப்புக்கள் என எல்லாமே சிவந்த நிறத்தில்
இருந்தன. நாங்கள் அவனருகில் சென்று அமர்ந்தபோது சிரித்தவாறே சொன்னான்,
'உங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் முகமனை எனக்குச் சொல்வதால் ஒன்றும்
பாதகமில்லையே'. நாங்கள் சொன்னோம், 'உம்முடைய முகமன் எங்களுக்கோ
எங்களது முகமன் உங்களுக்கோ ஒத்து வராது'.

'அப்படியாயின், உங்களின் முகமன் தான் என்ன ?'

'அஸ்ஸலாமு அலைக்கும் (உன் மீது ஸலாம் உண்டாகட்டும்)'

'உங்களின் அரசனுக்கு என்ன முகமன் கூறுவீர்கள்'

'அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முகமன் தான்'

'சரி, உங்களுடைய உயர்ந்த வார்த்தை (கலிமா) எது ?' என்று கேட்க

நாங்கள் உரத்த குரலில் 'லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று
சொன்னதுதான் தாமதம் அரண்மனையின் மேல் பகுதி ஒன்று இடிந்து விழுந்தது.

அதனைப் பார்த்த அதிர்ச்சியுடன் அரசன் கேட்டான் 'இந்த வார்த்தையை நீங்கள்
ஒவ்வொரு முறை கூறும்போதும் ஏதாவது இடிந்து விழுகிறதா'

'இல்லை இது போல் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை, உம்முடைய விஷயத்தில்தான்
இவ்வாறு நடைபெறக் கண்டோம். அதற்கு மன்னன், 'அடடா, ஒவ்வொறு முறையும்
இந்தக் கலிமாவை நீங்கள் மொழியும் போது உங்கள் அனைவரின் தலையிலும் ஏதாவது
விழுந்து நீங்களெல்லோரும் அழிந்து போக வேண்டாமா என்று ஆசைப் படுகிறேன்' என்று
சொன்னதன் பின் ஏதோ யோசித்தவனாக,

'சரி, உங்களின் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என்று
கேட்டான். நாங்களும் அவை பற்றி விளக்கிச் சொன்னோம். அவன் எங்களை மூன்று
நாட்கள் தங்க வைத்து உபசரித்தான். ஒரு நாள் இரவில் ஆளனுப்பி எங்களை அவனிடம்
அழைத்து வரச் செய்தான்.....

(இன்ஷா அல்லாஹ் தொடரும் )

டிஸ்கி :
நபியவர்களின் முன்னறிவிப்புக்களில் ஒன்று, தஜ்ஜால் (anti christ) வருவதற்கு முன்
முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இக் கலிமாவை மொழிவார்கள். இதன் காரணத்தால் யூதர்கள் ஒளிந்திருக்கும் கோட்டையின் சுவர் இடிந்து தரை மட்டமாகும்.

Monday, March 28, 2011

தர்காவுக்குப் போகலாமா வேண்டாமா ‍- Part II

முதல் பகுதியின் தொடர்ச்சி ...

இஸ்லாத்தில் மூன்று பள்ளிகள் புனிதமானவை 1.கஃபத்துலாஹ் (மக்கா),
2.மஸ்ஜிதுன் நபவி (மதீனா), 3.பைத்துல் முகத்தஸ் (ஜெருசலம்). அதற்காக
மற்றப் பள்ளிகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. அவை மூன்றும் முதல்
அந்தஸ்த்தில் உள்ளவை. கஃபத்துலாஹ் ஆதம் நபியால் கட்டப்பட்டு
இப்ராஹீம் (Abraham) நபியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. மதீனாப் பள்ளி
முகம்மது (ஸல்) மற்றும் அவர்களது நபித்தோழர்களால் கட்டப்பட்டது.
ஜெருசலம் பள்ளி தாவுது (David), சுலைமான் (Solomon) நபிகளால் கட்டப்பட்டது.

மற்றப் பள்ளிகள் அவ்வப்போது தொழுபவர்களின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வந்தன,
இனியும் கட்டப்படும். ஆனால் தர்காக்கள் ஏன்,யாரால் கட்டப்பட்டன என்ற விவரம்
தெரியவில்லை. இனியும் கட்டப்படாது என்றே நினைக்கிறேன். அது தொழப்படும்
பள்ளியுமல்ல, இறைவனின் ஆலயமுமல்ல மாறாக அது வெறும் அடக்கஸ்தலம்தான்.
பிறகு ஏன் மக்கள் அங்கே செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இங்கேதான்
தவ்ஹீதுவாதிகளும் தரீக்காவாதிகளும் பிரிகிறார்கள். இருவரும் பேசிக்
கொள்வதைக் கேட்போமா.

தவ்ஹீது : நீங்கள் ஏன் தர்காவுக்குச் செல்கிறீர்கள், அது பாவமாச்சே.

தரீக்கா :
பாவமென்று யார் சொன்னது, மரணத்தை நினைவூட்டுவதால் அடக்கஸ்தலம்
செல்லுமாறு நபிகளே சொல்லியிருக்கிறார்களே.

தவ்ஹீது :
நீங்களெல்லாம் அதற்காகச் செல்வதில்லை, அங்கு அடங்கி இருப்பவரிடம்
உங்கள் தேவைகளைக் கேட்கச் செல்கிறீர்கள்.

தரீக்கா :
கேட்பதால் என்ன தவறு, டாக்டரிடம் சென்று காண்பிப்பது போலத்தான் இதுவும்.

தவ்ஹீது : டாக்டர் உயிரோடு உள்ளவர் அவரோ மரணித்தவர்.

தரீக்கா :
இறை நேசர்கள் உயிரோடு இருக்கிறார்கள் மரணிக்கவில்லை என்று இறைவன்
தன் திருமறையில் கூறியிருக்கின்றானே.

தவ்ஹீது :
அது நபிமார்களைப் பற்றிச் சொன்னது. மேலும் இறைவன் யாரை நேசிக்கிறான்
என்பது அவனுக்குத் தானே தெரியும்.

தரீக்கா :
அது இன்னொரு இறைநேசருக்கும் தெரியும், அவர் முலமாக எங்களுக்கும் தெரிய வரும்.

தவ்ஹீது :
அப்படிப்பட்ட இடைத்தரகர் எங்களுக்குத் தேவையில்லை. தன்னிடமே நேரடியாகக்
கேட்குமாறு இறைவன் சொல்கிறான்.

தரீக்கா :
தந்தையிடம் நேரடியாகக் கேட்க வெட்கப்பட்டோ அல்லது பயப்பட்டோ தாய்
மூலம் கேட்கும் பிள்ளையைப் போல் நாங்கள் அவ்லியா மூலம் கேட்கிறோம்.

தவ்ஹீது :
இந்த உதாரணமெல்லாம் இறைவனுக்கு ஒத்து வராது. அவ்லியாக்கள் எல்லாம்
இறைவனுக்கு மனைவியா. நீங்கள் பகிரங்கமாக இணை வைக்கிறீர்கள். பாவிகள்.
நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர் விளங்கிக் கொள்கிறாரா அதுவும் ஒரே
சமயத்தில் எல்லோருடைய தேவைகளையும் கேட்க முடிகிறதா. நிச்சயமாக நீங்கள்
இறைவனின் தன்மைகள் அவரிடமும் இருப்பதாகக் கருதுகிறீர்கள். உங்களின் இந்த
நிலை மக்கத்துக் காபிர்களின் நிலையை ஒத்திருக்கிறது. படைத்தது யார் என்று
கேட்டால் ‘அல்லாஹ்’ என்று சொன்னார்கள், பிறகு ஏன் இந்தச் சிலைகளை
வணங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ் ஒருவனால்
எல்லாவற்றையும் செய்ய முடியாது. அதனால்தான் அவைகளிடம்
எங்கள் தேவைகளைக் கேட்கிறோம் என்று சொன்னார்கள்.

தரீக்கா :
அடப்போங்கப்பா, வயதுக்கு வராதவனுக்கு தாம்பத்ய இன்பம் எப்படித் தெரியும்.
தர்காக்கள் பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு ஷைகிடம் (சூஃபி அறிஞர்)
முரீதாக (மாணவனாக) பைஅத் (ஒப்பந்தம்) செய்து கொண்டு பயிற்சி பெற்றால்தான்
தெரிய வரும். பைஅத் சம்பந்தமான ஹதீஸ்களைப் பாருங்கள். பைஅத் பெறாமல்
மோட்சம் கிடையாது என்பதை அறிவீர்கள்.

தவ்ஹீது : பைஅத்தாம், மோட்சமாம் போங்கய்யா நீங்களும் உங்க ....

இப்படிப் போகிறது இருவருக்குமிடையேயான சம்பாஷணைகள். இன்னும் லாஜிக்கலா
கிளைக் கேள்விகளும் கிளை பதில்களும் உண்டு. நாம் என்ன முடிவுக்கு வருவது :(.

-------------------------- * * * * * -------------------------

இணை வைத்தலில் பல வகைகள் உண்டு. சூரியன், சந்திரன், நட்சத்திரம் அடங்கிய
பிரபஞ்சங்களின் மீது நம்பிக்கை வைப்பது. உயிருள்ள மிருகங்கள், பறவைகள்,
மனிதர்கள், ஜின்கள் மீது நம்பிக்கை வைப்பது. உயிரற்றவர்களின் மீதும், கற்களின்
மீதும், நாடு, அரசாங்கம், இனம், குழு, எண்ணிக்கை, படை பலம், Technology,
கல்வி, அறிவு இன்னும் தன் மீதும் நம்பிக்கை வைப்பது அனைத்தும் இணை
வைத்தலில் கொண்டு போய்ச் சேர்க்கும். இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பெரிய ஷிர்க் மற்றும் சின்ன ஷிர்க். நபியவர்களுடைய ஒரு ஹதீஸின் கருத்தாவது,

‘எனது உம்மத்து (சமுதாயம்) சிலை வணக்கம் போன்ற பெரிய ஷிர்க்கில் விழுவார்கள்
என்பதை விடச் சிறிய ஷிர்க்கில் வீழ்ந்து கிடப்பார்களே என்றுதான் அஞ்சுகிறேன்’.
குர்ஆனிலும் இது பற்றி வந்திருக்கிறது.

(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித்
தவிக்கும் சமயத்தில்) எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள்
அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?.
இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக்
காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே.

நபியே!) நீர் கூறும், உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய
கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும் அல்லது
உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை
அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள்
விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி)
விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (6: 63 - 65)

மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில்
வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை
(பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே)
இணை வைக்கின்றனர். (29:65)

யோசித்துப் பார்த்தால் நம்முடைய பேச்சிலும் செயலிலும் எத்தனை ஷிர்க்குகள் செய்து
வருகிறோம். மழை, காற்று, புயல், சுனாமிகளின் போதும், சம்பாத்தியம், வாழ்வாதாரம்,
பாதுகாப்பு, எதிர்காலம் பற்றிய பேச்சு,செயல்களின் போதும் நாம் எப்படி நடந்து
கொள்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

இறைவனின் கூற்று,"அடியான் என்னைப் பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே
நானும் நடந்து கொள்கிறேன்
" (பதிவைப் புரிந்து கொள்ள இதுவொன்றே போதும்).

-------------------------- * * * * * -------------------------

ஊரில் இருக்கும்போது ஒருமுறை எனது செல்ஃபோன் தொலைந்து விட்டது. எனது
உறவினர் பெண்மணி ஒருவர், எங்களூரில் வசித்து இறந்து போன ஒரு முதியவரின்
பெயரைச் சொல்லிக் கேட்டால் தொலைந்த பொருள் கிடைத்து விடும் என்று வேண்டிக்
கொண்டார். நானோ அந்த வம்பே வேண்டாம் என்று நபியவர்கள் காட்டித் தந்த இரண்டு
ரக்அத் தொழுது துஆ செய்தேன். செல்ஃபோன் கிடைத்தது. எனக்குத் தொழுகையின்,
துஆவின் மீது நம்பிக்கை பிறந்தது. அந்த உறவினருக்கும் அவரைச் சார்ந்த
பெண்களுக்கும் மறைந்த ‘அப்பாவின்’ மேல் நம்பிக்கை உயர்ந்தது. :)

ஒருமுறை மழை பெய்த போது நபியவர்கள், 'அல்லாஹ்வின் நாட்டத்தின் படி மழை
பொழிந்தது என்று சொன்னவர்கள் இறை நம்பிக்கையை அடைந்து கொண்டார்கள்,
மாறாக குறிப்பிட்ட நட்சத்திரத்தின் நகர்வின் காரணமாக மழை பொழிந்தது என்று
சொன்னவர்கள் இறை நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்' என்று சொன்னார்கள்.
ஆக உலகத்தில் நடைபெறும் அத்தனையும் இறைவனின் விதிப்படியே நடக்கின்றன.
இந்த நிகழ்வுகளிலிருந்து என்ன நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதைத்தான் நாம்
கவனிக்க வேண்டும். இது பரீட்சைக் கூடம், பலவிதமான சோதனைகள் இருக்கும்.

ஒருமுறை ஹஜரத் அலீ அவர்கள் போரிடுவதற்காகப் புறப்பட்டார்கள். இந்த நேரத்தில்
புறப்பட்டால் அலீ தோற்றுப் போவார், ஏனென்றால் நேரம் சரியில்லை என்று ஒரு குறி
சொல்லும் ஜோதிடன் சொன்ன விஷயம் அலீ(ரலி) அவர்களிடம் சொல்லப் பட்டது.
அதற்கவர்கள் ‘மஷ்வரா (ஆலோசனை) செய்து முடிவெடுத்த நேரத்தை மாற்ற
முடியாது, தோற்றாலும் பரவாயில்லை என்று கிளம்பினார்கள். அதாவது உலக
வெற்றி தேவையில்லை, மறுமையின் வெற்றிக்கான ஈமானைப் பாதுகாப்பதுதான்
முக்கியம் என்பது இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.

கஸ்ஸாலி என்றொரு அறிஞர் சொல்கிறார், சிலர் பாம்பைப் பிடித்து அதிலிருந்து
விஷத்தை எடுத்து விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிலர் பாம்பைப்
பிடிக்கும் வித்தையைக் கற்காமலே அதில் ஈடுபடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாய்
முடியும். அது போலவே உலக வாழ்வின் தத்துவம், தாத்பரியம், விஷம் அறியாது
அதனைச் சேகரிக்க நினைப்பவர்களின் ஈமான் ஆபத்தில் இருக்கிறது. உயிர் பெரிதா
ஈமான் பெரிதா, ஈமான் பெரிதென்று நினைப்பவர்கள் நிச்சயம் ஒவ்வொரு
ஸ்டெப்பையும் கவனமாகத்தான் வைப்பார்கள்
.

மரணச் சமயத்தில் ஈமானைப் பறிப்பதற்கு ஷைத்தானின் முயற்சி கடுமையாக
இருக்கும். தவ்ஹீதுவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு
தரீக்காவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு எனும்போது
பொதுமக்களின் நிலைமையை என்ன சொல்வது. காலமெல்லாம் ஈமானுக்காகப்
பாடுபட்டவர்களும் இறையச்சமுள்ள நல்லடியார்களும் அவனின் சூழ்ச்சியிலிருந்து
பாதுகாக்கப் படுவார்கள். ஆனால் பொதுமக்களோ ‘கண்டதே காட்சி கொண்டதே
கோலம்’, என்ற அறியாமையிலும் ‘நமக்கு வேண்டியது எங்கேர்ந்து கெடச்சா என்ன’
என்ற சுயநலத்திலும் உழன்று தம் உயிரினும் மேலான ஈமானை மரணத்திற்கு
முன்பே பறிகொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

-------------------------- * * * * * -------------------------

தரீக்காவாதிகள் ‘ஷைகு’ என்ற குருநாதரின் கண்காணிப்பில் இருப்பவர்கள். குர்ஆன்,
ஹதீஸை எப்படி அணுக வேண்டும் என்ற 'மெய்ஞ்ஞானம்' குருநாதரால் போதிக்கப்
படுபவர்கள். கஸ்ஸாலி என்ற அறிஞர் (சூஃபி) தரீக்காவாதியான பின்புதான் நல்ல
இஸ்லாமியத் தவ்ஹீது கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் படைத்தார் என்றும்
தரீக்காவில் இணைவதற்கு முன் தாம் எழுதிய புத்தகங்களெல்லாம் குப்பை என்று
உணர்ந்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவருடைய வரலாறு கூறுகிறது. அவருடைய‌
தவ்ஹீதுக் கருத்துக்கள் இன்றைய தவ்ஹீதுவாதிகளால் கூட புரிந்து கொள்ள முடியாத
அளவுக்கு நுணுக்கமானதாக இருக்கும். ஆனால் அக்காலத்தில் இருந்த ஷைகுகள்
போன்று இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.

ஷைகிடம் பைஅத் செய்வது பாதுகாப்பாய்த் தெரிந்தாலும் தவறான ஷைகைத்
தேர்ந்தெடுத்து விட்டால் அதோ கதிதான். அதுபோல நாம் தேர்ந்தெடுத்த நல்லவர்
ஷைத்தானுக்கும் நல்லவராகி விட்டால் அவ்வளவுதான், ஓட்டு மொத்தக் கூட்டமும்
ஸீதா ஜஹன்னம்தான் (நேரா நரகம்தான் :). ஆதலால் தர்காவின் தாத்பர்யம் தெரிய வேண்டுமென்றால் யாராவது நல்ல ஷைகைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்
கிடைக்காத பட்சத்தில் தவ்ஹீதுவாதிகளாக இருங்கள். குறைந்த பட்சப் பாதுகாப்பாவது
கிடைக்கும். ஈமானியப் பாதுகாப்பு வளையமின்றி அங்கு செல்வது ஆபத்தானது.

தர்கா இஸ்லாத்தின் அம்சம் என்றால் அது இஸ்லாம் செல்லுமிடமெல்லாம்
அதுவும் செல்லவேண்டும். அனால் அது இணைவைப்பாளர்கள் வாழ்ந்த,வாழும்
இந்தியத் துணைக் கண்டத்தில்தான் அதிகம் காணப படுகின்றன. ஒருவேளை
இணை வைப்பாளர்களான மனிதன் மற்றும் ஜின்களால் வைக்கப்படும் மாந்திரீகத்
தொல்லைகளை முறியடிப்பதற்காகவே இவை அமைக்கப் பட்டதாக இருக்கலாம்.
அல்லது அல்லது பிஸினெஸ்ஸுக்காக உருவானதோ இல்லை இணைவைத்தலில் ஈடுபடுத்துவற்காகவே ஷைத்தான்களால் உருவாக்கப் பட்டதோ தெரியவில்லை.

அல்லது ஒரு இஸ்லாமிய அறிஞரை எவ்வாறு நாம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து
கொள்ள‌, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள அணுகுகின்றோமோ அது போலவே
ஜின்களும் அவர்களை அணுகிப் பாடங்கள் படிக்கின்றன, நாளடைவில் அவருக்குச்
சீடராகி மனமுவந்து சேவைகள் செய்கின்றன். அந்த அறிஞர் மரணித்த பின்னும்
அவரிடத்திலே தங்கி அங்கு வரும் மக்களுக்குச் சேவை செய்கின்றனவோ ..
இன்னும் எந்த‌ மூலிகையில் என்ன நிவாரணம் உண்டு என்பதை அறிந்து
வைத்துக் கொண்டு அங்கு வரும் புதிர் நோய்களைக் கொண்ட நோயாளிகளைக்
குணப்படுத்துகின்றனவோ .. அல்லது மறைந்த‌ இறைநேசர்கள் இறைவனின்
அனுமதியுடன் தமது சேவையை இன்னும் தொடர்கிறார்களோ என்றெல்லாம்
யோசிக்கத் தோன்றுகிறது. காரணம் ஆச்சர்யத்தக்க வகையில் மருத்துவ
ஆப்பரேஷன்கள் கனவிலும் மயக்க நிலையிலும் நடைபெறுவதாக அங்கு
சென்று சுகம் பெற்ற சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.

இப்படி மர்மமாகவே இருக்கும் தர்காக்களைப் பற்றி என்னைப் போன்ற ரெண்டுங்
கெட்டான்களால் என்ன எழுதி இந்தச் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.
'இங்கு போவதால் என்ன தப்பு, ஏன் போகக் கூடாது' என்று சொல்பவர்கள்தாம் தர்கா
என்றால் என்ன அங்கு ஏன் போக வேண்டும் என்பது பற்றிச் சரியாக விளக்க முடியும்.
லாஜிக்கலா எதிர்கேள்விகள்தாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய சரியான
முறையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று சொல்வதில்லை. ஆதலால்
இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

தர்காவுக்குப் போகலாம் என்று சொல்லும் நீங்கள் 'எப்படிச் சென்றால் ஈமானுக்குக்
கேடு வராது என்று அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் சொல்லித் தர வேண்டிய பொறுப்பு'
உங்களுக்கு இருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்களோ இல்லையோ அவ்லியாக்களைப் பற்றி நன்றாகவே அறிந்து
நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

"பாவம் விட்டில் பூச்சிகளாய் அங்கு வந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது
இஸ்லாமியத் தேனீக்களின் இறைவன் பற்றிய நம்பிக்கை
"


வஸ்ஸலாம்

Wednesday, March 23, 2011

தர்கா - ஒரு குவிலென்ஸ் பார்வை – Part I

இது எந்த குரூப்பையும் சாராத ஒரு சாமானியனின் புரிதல்கள் :

------------------- 'அல்லாஹ்வே மிக அறிந்தவன்' -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை
அல்லாஹ்வைத்தவிர) என்ற கலிமா தய்யிபாவின், தலையாய மந்திரத்தின்,
பிரம்ம சூத்திரத்தின் நோக்கம் அல்லது உள் அர்த்தம் என்னவென்றால்,

‘யாரைக்கொண்டும் எதுவும் நடப்பதில்லை எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான்
நடக்கின்றன. அவனன்றி எதுவும் அசைவதில்லை. படைப்பினங்கள் படைத்தவனின்
உதவியின்றி எதுவும் செய்ய இயலாது. ஆனால் படைத்தவனோ படைப்பினங்களின்
உதவியின்றி எல்லாம் செய்யும் ஆற்றல் பெற்றவன். எனவே அவன்தான்
உண்மையில் வணங்கப்படுவதற்கு உரித்தானவன்’.

இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவம்.

இந்தத் தத்துவத்தை நம்பி ஏற்றுக் கொண்டவர்கள் முஸ்லிம்கள். இவ்வுலகம்
சோதனைக்கூடம். இந்த நம்பிக்கையைக் கெடுப்பதற்கான சம்பவங்கள் அலைகள்
போல வாழ்க்கையில் வரும் போகும். ஆனாலும் இந்த நம்பிக்கையைக் கடைசி
வரையிலும் பாதுகாத்து அவனிடம் சென்று சேர்பவர்களுக்குப் பரிசாகச் சுவனம்
காத்திருக்கிறது. இதற்கு மாறாக நம்பிக்கையைப் பறிகொடுத்து, அவனுக்கு
இணைவைத்து, அவனது விருப்பத்திற்கு மாறாக வாழ்ந்து மறைந்தவர்களுக்குக்
கடும் தண்டனை காத்திருக்கிறது (முஸ்லிமாகப் பிறந்திருந்தாலும்).

சுப்யான் என்ற நபித்தோழர் அறிவிக்கிறார்கள்,
‘இறைத்தூதரே, தங்களுக்குப் பின் யாரிடமும் கேட்கத் தேவைப்படாத அளவு எனக்கு
ஒரு உபதேசம் செய்யுங்கள், நான் அதைப் பற்றிப்பிடித்துக் கொள்கிறேன் என்று நான்
கேட்டதற்கு நபியவர்கள் சொன்னார்கள்,

அல்லாஹ்தான் என் இறைவன் என்று சொல் பின் அதன் மீது நிலைத்திரு


-------------------------- * * * * * -----------------------


லா இலாஹ இல்லல்லாஹ்வை மனதார மொழிந்து இறைவனை ஏற்ற சில
நொடிகளில் மரணம் வரப்பெற்றவர்கள் அல்லது மனித சஞ்சாரமற்ற காட்டிலோ
தீவிலோ மலையிலோ வாழ்ந்து கலிமாவின் தத்துவப்படி மரணித்தவர்கள்
சுலபமாகச் சுவனம் சென்றடைவார்கள்.

ஆனால் மக்களோடு மக்களாய், குடும்பம் குட்டிகளோடு வாழ்ந்து வரும் இறை நம்பிக்கையாளர்களுக்குப் பலவிதமான சோதனைகள் காத்திருக்கின்றன.
(அதுபோல நன்மைகளும் முன்னவர்களை விட மிக அதிகமாகக் கிடைக்கும்)
வாழ்வில் அவர்கள் சந்திக்கும் தேவைகள்,பிரச்னைகள்,நோக்கங்கள் தீருவதற்குச்
செய்யப்படும் முயற்சிகளை வைத்து அவர்களின் நம்பிக்கை பரிசோதிக்கப்படுகிறது.
எந்த வழியில் சம்பாதிக்கிறார்கள், எதில் செலவழிக்கிறார்கள், நோய் போன்ற
பிரச்சனைகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், பாதுகாப்புக்கு யாரை நாடுகிறார்கள்
போன்ற எல்லா விஷயங்களும் கண்காணிக்கப் படுகின்றன.

"நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்)
அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள்
எண்ணிக் கொண்டார்களா ? (அல்குர்ஆன் 29:2)

‘உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள்
உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள்
எண்ணுகிறீர்களா’ (அல்குர்ஆன் 2:214)


-------------------------- * * * * * ----------------------------


PANADOL உபயோகித்தோம் தலைவலி பறந்து விட்டதென்றால் அதன் மீது
நம்பிக்கை வருவது இயல்பு. அடுத்தமுறை தலைவலி வந்தால் அனிச்சையாய்
அதனைத் தேடுகிறோம். குழந்தைக்குச் சுகம் கிடைத்து விட்டால் குழந்தை
மருத்துவரின் மீது நம்பிக்கையும் அன்பும் பிறக்கிறது. பிறருக்கும் அவரிடம்
செல்லுமாறு ஆலோசனை சொல்லவாரம்பித்து விடுவோம். இதுதான் மனித இயல்பு.

இஸ்லாம் என்ன சொல்கிறது, "நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக்
குணப்படுத்துகிறான்’ (அல்குர்ஆன் 26:80). ‘நோய் நிவாரணமின்றி எந்த நோயும்
இறங்குவது கிடையாது’ (ஹதீஸ்).

உடனே நமக்குள் ‘அப்ப நாம் ஏன் டாக்டரிடம் செல்ல வேண்டும்’ என்ற ஒரு
கேள்வி பிறக்கும். பதில், ‘டாக்டரிடம் போகத்தான் வேண்டும்’. காரணம்
இறைவன் இவ்வுலகத்தைக் காரண காரியங்களைக் கொண்டு படைத்துள்ளான்.

ஒவ்வொரு படைப்புக்கும் பின்னால் அவனது சக்தி இருக்கிறது. மருத்துவரால்
அல்லது மருந்தால் குணம் ஏற்படுவது போல் தோன்றினாலும் இறைவன்தான்
குணப்படுத்தினான் என்று விளங்கி அவனுக்கு நன்றி செலுத்தும் போது ஈமான்
என்ற நம் நம்பிக்கை வலுப்பெறுகிறது, பாதுகாக்கப் படுகிறது.

படைக்கப் பட்டவை அனைத்தும் உடல் என்றால் அவற்றின் உயிர் அவனது
கட்டளை அல்லது சக்தியாக இருக்கிறது. ஒவ்வொன்றிலும் நல்லதும் உண்டு
கெட்டதும் உண்டு. ஒரு பொருள் நமக்கு நன்மை தருவதும் தீமை தருவதும்
அவனது நாட்டப்படி அல்லது கட்டளைப் படி தான்.

நம்முடைய கடமை படைப்பினங்களை உபயோகிக்க வேண்டும் ஆனால் நம்பிக்கை
வைக்கக் கூடாது. மேலும் உபயோகிக்குமுன் அவனிடம் ஒரு வேண்டுதல் செய்வது
அவனுக்குப் பிடித்தமானது. கம்பெனி எம்.டி யிடம் வேலையாள் அனுமதி பெற்றுச்
செல்வது போல. ‘செருப்பின் வார் அருந்தாலும் அவனிடமே கேளுங்கள்
என்று நபியவர்கள் நமக்குச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

மேலும் இறைவன் தன் திருமறையில் பின்வருமாறு வினவுகிறான்.

“(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே
நம்மை எவரும் மிகைக்க முடியாது. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில்
உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல). முதல் முறையாக
(நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே
(அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(இப்பூமியில்) நீங்கள் விதைப்பதை கவனித்தீர்களா? அதனை நீங்கள்
முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால்
நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். "நிச்சயமாக நாம் கடன்
பட்டவர்களாகி விட்டோம். "மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற
முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா ? மேகத்திலிருந்து அதை
நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? நாம் நாடினால்,
அதைக் (குடிக்க முடியாத அளவுக்குக்) கசப்பானதாக ஆக்கியிருப்போம்.
(இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா? அதன் மரத்தை நீங்கள்
உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா? நாம் அதனை
நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்குப் பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு
அவனைத் துதிப்பீராக". அல்குர்ஆன் (56 : 58-74)


-------------------------- * * * * * ----------------------------


இவ்வுலகம் பரிட்சைக் கூடம். மனிதனுக்கும் ஜின்னிற்கும் தனது இஷ்டப்படி
நல்லதையோ கெட்டதையோ ‘தேர்ந்தெடுக்கும் அதிகாரம்’ (Deciding Authority)
தரப்பட்டுள்ளது. மற்றப் படைப்பினங்கள் அனைத்தும் மனிதனுக்குச் சேவை
செய்வதற்காகவே டிசைன் செய்யப்பட்டுள்ளன.

இவ்வுலக வாழ்வில் நாம் வளர்த்துப் பாதுகாத்த நம்பிக்கையும் சேகரித்த
செயல்களும்தான் மறுவுலகில் பரிசீலிக்கப்படவிருக்கின்றன. இறை நம்பிக்கையில்
மிக உயர்ந்தது ‘ஒரு பிரேதத்தைப் போல் இறைவனிடம் தன்னை ஒப்படைப்பது,
தனக்கென்று எந்த விருப்போ அல்லது வெறுப்போ இல்லாமல் இறை விருப்பத்திற்குத்
தன்னைத் தயார்ப்படுத்துவது.

இப்ராஹீம் நபியவர்கள் நம்ரூத் என்ற அரசனால் நெருப்பில் போடப்பட்டபோது
அங்கு வருகை புரிந்த ஜிப்ரீல் எனும் வானவர் தலைவரின் உதவியையும் மறுத்து,
‘நான் நெருப்பில் இடப்படுவது இறைவனின் விருப்பமென்றால் அதை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்’ என்ற பதிலால் திருப்தியுற்ற இறைவன் நெருப்பையே குளிரச்
செய்தான். ஆனாலும் இதைப் பின்பற்ற எல்லோராலும் முடியாது என்பதற்காகவே
முகம்மது நபி(ஸல்) அவர்கள் சாதாரண மக்களிலிருந்து சான்றோர்வரை பின்பற்ற
ஏதுவாகப் பலவிதமானத் தீர்வுகளைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு, நபியவர்களைக் கொல்வதற்கு மக்கத்துக் குறைஷிகள் சுமார்
நூறு பேர் ஆயுதம் தரித்து அவர் வீட்டு வாசலில் காத்திருக்கும் போது இறைவனின்
நேரடி உதவியுடன் எதிரிகளின் ஊடே நடந்து தப்பித்தார்கள். அதே சமயம் அபுபக்கர்
எனும் தோழருடன் செல்லும் போது சாதாரண மனிதர்களைப் போல் மலைப் பொதும்பில்
மூன்று நாட்கள் மறைந்திருந்து தப்பித்தார்கள். நபியவர்களின் சொல்லிலும் செயலிலும் சான்றோருக்கான படிப்பினையும் சாமானியனுக்கானப் படிப்பினையும் சேர்ந்தே
மறைந்திருக்கின்றன. குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் நோக்கத்தை, சாராம்சத்தைச்
சான்றோர்கள்தாம் நன்கு அறிய முடியும். சிலருக்குக் கனவின் மூலமாகவும்
அறிவிக்கப் படுகிறது. சிலர் குர்ஆன் ஓதும்போது அதன் உள் அர்த்தத்தின் மூலம்
விளங்கிக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சான்றோர்களுக்கு முன்பு ‘சஹாபாக்கள்’
(நபித் தோழர்கள்) என்று பெயர். அதற்குப் பின் வந்தவர்களுக்கு வலிமார்கள்
(இறை நேசர்கள்) என்று பெயர்.

இறைநேசம்,இறைகாதல் இவற்றிற்காகத் தம்மை, தம் விருப்பு வெறுப்புக்களைத்
தியாகம் செய்பவர்களுக்காகத்தான் இந்த அந்தஸ்து கிடைக்கும். ‘ரிஸ்க் எடுப்பவன்
ரஸ்க் சாப்பிடுவான்’. இவர்கள் நல்ல மீனவர்களைப் போன்றவர்கள். நமக்கு மீன்
சாப்பிட விருப்பம் என்றால் ஒன்று நாம் கடலுக்குச் செல்ல வேண்டும். அதற்குப்
போதிய பயிற்சி வேண்டும். நல்ல மீன்கள் எங்கே கிடைக்கும் என்று அறிவது
மட்டுமல்லாமல் எங்கே என்னென்ன ஆபத்துக்கள் உண்டு அவற்றைச் சமாளிப்பது
எப்படி என்றும் அறிந்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் நேரமோ பொறுமையோ
இல்லையென்றால் நல்ல மீனவர்களை நாடுவோம். அவர்களிடமிருந்து சில சமயம்
முத்து பவளங்கள் கூடக் கிடைக்கும் வாய்ப்புண்டு.

இதைப் போன்றுதான் இஸ்லாத்திற்காகத் தம்முடைய உயிர்,பொருள்,ஆவி,நேரம்,
பணம் கொடுக்க இயலாதவர்களும், ஞானத்தைத் தேடி அலைபவர்களும் நாடுவது
இந்தச் சான்றோர்களைத்தாம். இன்று இது போன்ற அறிஞர்கள் கிடைப்பது
குதிரைக் கொம்பாக இருப்பதால் பழைய அறிஞர்களையே கொண்டாடி வருகின்றனர்
பெரும்போலோர். இவர்கள் வாழ்ந்து மறைந்த இடங்களில் சில ‘தர்காவாகக்
கொண்டாடப் படுகின்றன’. சில போலி தர்காக்களும் காசு நோக்கத்தில் உருவாக்கப்
பட்டுள்ளன. இனி தர்கா என்றால் என்ன, அங்குப் போகலாமா வேண்டாமா,
அப்படிச் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன தீமைகள் என்ன என்பதை
இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரப் பதிவில் பார்ப்போம். :)


(இன்ஷா அல்லாஹ் தொடரும்)


டிஸ்கி : எனது இந்தப் புரிதலில் தவறு இருந்தால் அன்பர்கள் தயை கூர்ந்து திருத்தவும்

Wednesday, December 29, 2010

இரண்டு விதமான‌ அப்ரோச்சும் ஆறாம் அறிவும் கூடவே நன்றியும்

நண்பர்கள் வைத்துக் கும்மியும் ஓட்டுக்களும் பெறும் இவ்வலையுலகில்
கேம்பெய்ன்,மார்க்கெட்டிங் டெக்னிக் ஏதும் செய்யாத நம்மையெல்லாம் எங்கே
கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல்
இருந்து வந்தேன். ஆனால் ஆச்சர்யம் எனது மூன்றில் இரண்டு இடுகைகள்
அடுத்த கட்டத்திற்குத் தாண்டியுள்ளன. ஓட்டுப் போட்டவங்க நல்லாயிருக்கணும்.

தமிழ்மணத்திற்கும், இதுவரை ஓட்டளித்தவர்களுக்கும் இனி ஓட்டளிக்க
இருப்பவர்களுக்கும் எனது மனமார நன்றியும் துஆக்களும்.

எனது பதிவுகள் ஆன்மீகம் பகுதியிலும், பொருளாதாரம் பகுதியிலும்
உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

அடுத்தக் கட்ட ஓட்டளிப்பிற்கான பூத் இங்கே

------------------------------------------------------

இனி பதிவுக்கு வருவோம்...

ஒரு நாட்டின் மன்னன் அன்று ஒரு அறிவிப்புச் செய்தான், அதாவது நாளை
அரண்மனைக்கு வருபவர்களுக்குப் பொற்கிழியும்,சன்மானமாமும்
தரப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அடுத்த நாள் மிக நீண்ட கியூ.
கியூவில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும் அரசரின் புன்சிரிப்பையையும்
மரியாதையையும் பார்த்த மன்னனின் மகன் தானும் போய் நின்று கொண்டான்.

அவனது முறை வந்ததும், அதுவரை புன்சிரித்து வந்த மன்னனின் முகம்
மாறியது. இங்கு வந்து நின்றதற்கானக் காரணம் கேட்டான்.

'கியூவில் நிற்பதால் தேவையானவை கிடைத்து மகிழ்ச்சியோடு திரும்பிச்
செல்லும் மக்களைப் பார்த்தவுடன் எனக்கும் ஆசை வந்தது'.

மகனின் இந்தப் பதிலைக் கேட்டுக் கோபப்படுவதா இல்லை வருத்தப் படுவதா
என்று குழம்பிய மன்னன் சொன்னான்,

'மகனே, இந்த நடைமுறை பொது மக்களுக்கானது. உனக்குரிய முறை
எதுவென்றால் உனக்கு எந்தத் தேவையாயினும் என்னிடம் நேரடியாகவே
கேட்பதுதான். அதுதான் எனக்கும் பிடித்தமானது'.

இந்தக் கதைக்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட்டு விடாதீர்கள் மக்களே :-)

இது கதையோ அல்லது உண்மையோ, நான் சொல்லப் போகும் சில
விஷயங்களுக்கு இதனை இங்கு உதாரணமாகப் பயன் படுத்தப் போகிறேன்.

இறைவன் என்னும் அரசனுக்குக் கீழுள்ள மக்களை இரண்டு விதமாகப்
பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக வாதிகள் (இளவரசன் போன்றவர்கள்)
மற்றொன்று நான்மீக வாதிகள் (பொது மக்கள்).

ஆன்மீகத்தில் நம்பிக்கையற்ற அனைவரையும் (அது முஸ்லிம்களாயினும் சரி)
நான்மீகவாதிகளில் சேர்த்துள்ளேன்.

ஆன்மீகவாதிகளில் இரு வகை, ஒருவர் சரியான இலக்கில் பயணித்து
இறைவனை அறிந்தவர்/அறிபவர். மற்றவர் ஆன்மீக வழியில் பயணப்பட்டுப்
பின் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து வழிகெட்டுப் போனவர்கள்.

ஷைத்தானின் மெயின் எதிரிகள் ஆன்மீக வாதிகள். அவர்களை வழிகெடச்
செய்வதுதான் அவனின் மிகப் பெரிய புராஜக்ட்,பிளானிங்,முயற்சி எல்லாம்.
நிற்க இது இப்படியே இருக்கட்டும்.

இறைவன் இளவரசனான ஆன்மீக வாதிகளிடம் எதிர் பார்ப்பது குழந்தைத்
தனத்தை. குழந்தை எப்படி எல்லாவற்றிற்கும் அம்மாவை அழைக்கிறதோ
அல்லது எதிர்பார்க்கிறதோ அது போல அடியார்கள் எல்லாத் தேவைகளுக்கும்
இறைவனின் பக்கம் முன்னோக்குதலையும் முடுகுதலையும் விரும்புகிறான்.

மன்னன் எங்ஙனம் இளவரசனுக்காக கஜானா அத்தனையும் திறந்து விடத்
தயாராக இருக்கிறானோ அது போல இறைவன் ஆன்மீக வாதிகளுக்காக
அத்தனையும் திறந்து தரக் காத்திருக்கிறான்.

போனில்லாமல் பேசலாம், டி.வி இல்லாமல் பார்க்கலாம், மக்களின் மனதைப்
படிக்கலாம், அடுத்து நடைபெறப் போகும் விஷயங்களை ஓரளவு விளங்கிக்
கொள்ளலாம், கனவின் விளக்கத்தை அறியலாம், நினைத்ததைப் பெறலாம்,
பிறருக்காகவும் பெற்றுத் தரலாம். ஆனால் வேடிக்கை என்னவென்றால்
உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு இறைவனைத் தவிர வேறு யாரின்
மீதும் அல்லது எதுவின் மீதும் ஆசையோ ஆர்வமோ இருக்காது. :-‍)

ஆறாம் அறிவு பற்றிய பிரணாவ் மிஸ்ட்ரியின் வீடியோ பார்த்திருப்பீர்கள்.
மவுஸ்லெஸ் ஆபரேஷனும் ஒரு பொருளை வாங்கலாமா வேண்டாமா
என்று அது தரும் சிக்னலை வைத்து முடிவு எடுப்பது இன்னும் என்னென்ன
விஷயங்கள். உண்மையில் அவரது முயற்சி வியக்க வைக்கிறது என்றாலும்
அது நான்மீக வாதிகளுக்குப் பிரயோசனம் தரும் கண்டு பிடிப்பென்றாலும் அது
பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானது. மட்டுமல்ல ஒவ்வொன்றுக்கும்
ஒரு கருவி என்று போனால் நாளை ஒவ்வொருவரும் (குப்)பைகள் தொங்கும்
மரம் போல கருவிகள் தாங்கிய மனிதனாகத் தான் அலைய வேண்டியிருக்கும்.

ஆன்மீக வாதிகளுக்கு முயற்சியின்றியே தேவைப்படும் பணம் கிடைக்கும்.
பணமின்றியே பொருள் கிடைக்கும். பொருளின்றியே தேவைகள் நிறைவேறும்.
பொதுமக்களைப் போல கஷ்டப்பட்டு உழைக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு
கண்டிஷன் அவர்கள் இளவரசனுக்குப் பின்னால் உள்ள பொறுப்பைப் போல
இறைவன் ஆன்மீகவாதிகளிடம் எதை விரும்புகிறான் என்பதை அறிந்து
அதனை நிறைவேற்ற வேண்டும்.

'அல்லாஹும்ம க்ஹிர்லீ வக்ஹ்தர்லீ (இறைவா எனக்கான‌ சிறந்ததை(நல்லதை)
நீயே தேர்ந்தெடுத்துத் தருவாயாக) என்ற துஆவே போதுமானது, அது பொருள்
வாங்குவதாய் இருந்தாலும் சரி, (ஜோசியம் பார்க்காமலேயே) சிறந்த துணை
தேடுவதாய் இருந்தாலும் சரி இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படும்
ஒரு அப்ளிகேஷன் அல்லது சப்ளிகேஷன்.

இதற்கான தேவை காசோ,பணமோ,திறமையோ அல்ல நம்பிக்கை மட்டுமே.




டிஸ்கி :

இதைப் படித்தவுடன் சரியென்று தோன்றினால் அல்லது மெலிதான புன்னகை
தோன்றினால் நீங்கள் ஆன்மீகவாதிகள். இதற்கு மாற்றமாக ஒரு ஏளனப்
புன்னகை,சிரிப்பு அல்லது கடுப்பு தோன்றினால் நீங்கள் நான்மீக வாதிகள் :)))

வஸ்ஸலாம்.

Wednesday, November 10, 2010

'அல்லாஹ்' எனும் ஆயுத எழுத்து, சில‌ Calligraphic சிந்தனைகள்



இது 'அல்லாஹ்' என்பதன் அரபி வார்த்தை எழுத்து. வலது பக்கத்திலிருந்து வாசிக்க
வேண்டும். முதல் எழுத்து அ(லிஃப்), இதை எடுத்து விட்டுப் படித்தால் 'லில்லாஹி'
(அல்லாஹ்விற்காக) என்று வாசிக்கப் படும். அலிஃபுக்கு அடுத்துள்ள ல(லாமை)
எடுத்தால் 'லஹூ' என்று வாசிப்பும் 'அவனுக்கே' என்ற அர்த்தமும் அமையும்.
பிறகு அடுத்த எழுத்தான ல(லாமை) எடுத்தால் 'ஹூ' (அவன்) என்றாகும்.

இப்படி ஒவ்வொரு எழுத்தும் 'அவனையே' குறிக்கிறது. இந்தச் சிறப்பு GOD க்கும்
கிடையாது கடவுளுக்கும் கிடையாது. மேலும் 'அல்லாஹ்' என்றால் அல் இலாஹ்
(வணக்கத்திற்குரியவன்) என்று அர்த்தம்.

'அல்லாஹ்' என்ற வார்த்தைக்கு பெண்பாலோ அல்லது பன்மையோ(Plural) கிடையாது.
இன்னொரு விந்தை அல்லாஹ் என்பதன் அரபி எழுத்து நம்ம கையிலேயே இருக்கு
(அப்ப நாம் எல்லாம் முஸ்லிம்கள்தானே)




இந்த எழுத்தைப் பலவிதமாக எழுதினால் எப்படியிருக்கும்.
இப்படி எழுதுவதற்குப் பெயர் காலிக்ராஃபி.





இதை இடதிலிருந்து வாசித்தால் ஆங்கிலம் வலதிலிருந்து வாசித்தால் அரபி எழுத்தும்
தெரிவது போல் வரைந்திருக்கிறார்கள்.

காலிக்ராஃபியில் 'அல்லாஹ்' என்ற எழுத்தைப் பலவிதமாகச் சித்தரிப்பது மட்டுமல்ல
சிதைப்பதும் நடந்து வருகிறது. உருவமில்லா இறைவனுக்கே இதன் மூலம் உருவம்
கொடுக்கப் பட்டுள்ளதைப் பாருங்கள்.



இப்படியே போய் ஆயுத எழுத்தாக மாறிப் போன விந்தை.





திரிசூலத்தின் திருமூலம் இதுவாக‌த்தான் இருக்கும் :)

அலிஃபும் ஹாவும் கீழே வாள்/பிடி/வேல் போலவும் மீதி திரிசூலமாகவும்.



எழுத்தைப் படுக்க வைத்துப் பார்த்தால் 'ஓம்' வருகிறது.

மேலும் பிஸ்மில்லாஹ்வைச் சுருக்கினாலும் 'ஓம்' வரும்.





மேலும் சில சிந்தனைகள்

ஆதம் நபியின் (இடது)பாதம் இலங்கையில் உள்ள மலையில் இருக்கிறது.
அதன் நீளத்தின் மீது சுமார் ஐந்தடி மனிதன் படுத்துறங்கலாம். நிமிர்ந்து படுத்து ஒரு கையை நீட்டிக் கொள்ளும் அளவு அகலம். இந்த பாதத்தை புத்தரின் பாதமென்று புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்கிறார்கள். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கௌதம புத்தருக்கு இந்த அளவு பாதம் இருந்திருக்காது. ஆனாலும் 'புத்தர்' என்றால் நபியையோ அல்லது மகானையோ குறிப்பதாக இருந்தால் அது முந்தைய புத்தரான‌ ஆதம் புத்தரின் பாதமே.

இவர்கள் இடது பாதத்தைத்தான் பூமியில் வைத்து இறங்கியிருக்கிறார்கள்.
நாமும் வாகனத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ இறங்கும் போது இடது காலை வைத்து இறங்குவது சுன்னத்து(நபிவழி) என்று அறிவோம். மேலும் கக்கூஸ் செல்லும் போது இடது காலை முதலில் வைத்து உள்ளே செல்ல வேண்டும் என்பதும் அறிவோம்.

சுவனத்தில் கக்கூஸ் உபாதை கிடையாது, தடுக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டதால் உபாதை எடுத்து இடம் தேடி இறைவனிடம் முறையிட்ட
போது 'சுவனத்தில் அதற்கு இடமில்லை', அதற்கான இடம் உலகம்தான்
என்று ஆதம் அனுப்பப் பட்டபோது 'இந்த உலகத்தைக்
கக்கூஸாகக் கருதி' இடது காலை வைத்தார்களோ தெரியாது.

இந்துக்கள் இந்த பாதத்தை 'சிவனடி பாதம்' என்கிறார்கள். மேலும் சிவனுடைய பிள்ளைகளான முருகனுக்கும் பிள்ளையாருக்கும் ஒரு பழத்தின் மீது சண்டை வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆதம் நபியின் இரு பிள்ளைகளுக்கும் ஒரு பழத்தினால் அல்ல  ஒரு பெண்ணால் சண்டை ஏற்பட்டு ஒருவர் மற்றவரைக் கொலை செய்த சம்பவம் மூலமாக இரண்டு பேரும் (ஆதமும் சிவனும்) ஒன்றா என எண்ணத் தோன்றுகிறது.

மேலும் ஆதமுக்கு அடுத்து வந்த நபிக்குப் பின் வந்த 'நூஹ்' நபி காலத்தில்
மக்கள் வத்து,சுவா,எகூஸ்,யஊக்,நஸ்ர் என்ற பெயர்கள் கொண்ட ஐந்து சிலைகளை வணங்கி வந்ததாக குர்ஆன் கூறுகிறது. இதில் இரண்டாவதான 'சுவா' மருவி 'சிவா'வானதோ என்னவோ. இந்த ஐந்து சிலைகளும் இறந்து போன நல்லோர்களின் ஞாபகார்த்தமாகத் தோன்றியவை.

மேலும் திருவிளையாடலில் வந்த 'பழத்தைத் தந்து நாடகத்தைத் துவக்குகிறீர்' என்ற வசனத்தை நாம் பார்த்து அல்லது கேட்டிருக்கிறோம். நாடகத்தைத் துவக்குகின்றவரான 'நாரதரின்' கலகம் நன்மையில் முடிவதாகச் சொல்லப்படும்.

இந்த நாரதரும் நாம் சொல்லும் 'கிள்ரு' நபியும், கிறித்தவர்கள் சொல்லும்
'பச்சைக் காவலாளியும்' ஒருவரே என இவர் குறிப்பிடுகிறார்.


கிருஷ்ணனின் கதையைப் பார்த்தால் மூஸா நபியின் சம்பவம் போலிருக்கும்.

ஆக இதுவெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் 'ஒரு மூலம் பல்கிப் பெருகி
குட்டி போட்டுக் கதையாகிக் கந்தலாகிப் பின் தைக்கப் பட்டுப் பின் நைந்து நூலாகிக் கடைசியில் இறுதிவரை உறுதியாக இருக்குமாறு இஸ்லாம் நெய்யப்பட்டு நீடூடி வாழ்ந்து வருவது தெரிய வரும்.

இந்த மனித சமுதாயம் குழந்தையா இருக்குறச்சே சின்ன சட்டை, வளர வளர
அதற்கேற்றவாறு அளவில் மாறி, பிறகு இறக்கும் வரை ஒரே அளவு கொண்ட
ஆடையாக‌ இஸ்லாம் தரப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் வராது.
இஸ்லாத்திற்கேற்றவாறு நாம்தான் மாற வேண்டும். நான் ரெடி, நீங்க ரெடியா :)


Thursday, October 28, 2010

'மைன்ட் யுவர் பிசினெஸ்'

'எச்சொல் யார்யார் செவி சேர்ப்பினும்
அச்சொல்லில் தேன் சேர்ப்பதறிவு'

புத்திமதி சொல்லப் படும் போது பிடிக்கலன்னா, 'ஓ(ன்) வேலயப் பாத்துக்கிட்டு
போய்யா'ன்னு புரியிற மாதிரி தமிழ்ல சொல்லாம, நாகரிகமா,ஸ்டைலா
வெள்ளக்காரன் மாதிரி நம்ம மக்கள்ஸ் இப்படி சொன்னது ஒரு கா..ல..ம்.

இப்பல்லாம் அட்வைஸ் எங்க கிடைச்சாலும் பிடிக்காட்டிக் கூட காது கொடுத்து
கேட்பது மட்டுமல்ல தன்னுடைய கருத்தையும் அங்கே பதிவிக்க நினைக்கும்
பிளாக்கர் காலம் இது.

சென்ற உம்ராவின் போது எனக்கும் நண்பனுக்குமிடையில் நடைபெற்ற உரையாடல்.
கஃபாவை வலம் வருவதற்காகச் சென்ற நேரமது.கீழே ஆண்களும் பெண்களும் கலந்த
கடுமையான‌ கூட்டமாக இருந்ததால் மாடியில் தவாஃப் செய்ய நேரிட்டது.

மாடியில் தவாஃப் செய்யும்போது அங்கங்கே பெண்கள் பகுதியைக் கடக்க நேரிடும்
போது பெண்களின் பேச்சுக்குரலும், ஓதும் சப்தமும் அதிகமாகக் கேட்டது.
அப்போது நண்பன் கேட்டான்,

'சத்தத்துக்கு என்னா அரபியில‌'

'சவ்த்'னு சொல்வாங்க, எதுக்கு கேக்குற?

இல்ல, இங்க பெண்கள் சத்தம் அதிகமா இருக்கு, சத்தம் போடாதீங்கன்னு
அரபியில‌ சொல்லத்தான். 'south maafee'னு சொல்லவா ?

'south maafee'ன்னா 'சத்தமேயில்லை(இன்னும் நல்லா சத்த‌ம் போடுங்க)ன்னு அர்த்தம்'.

பின்ன எப்படி கேட்கிறது, 'சவ்த் லேஷ்' (ஏன் சத்தம்) என்று கேட்கவா அல்லது
'சவ்த் மா இரீது' (சத்தம் தேவையில்லை) என்று சொல்லலாமா ?

எனக்கும் சரியான சொல்லாடல் தெரியாததால், இங்க பாரு டைரக்டா சொல்றதா
இருந்தா, 'உஸ்குத்' (வாய மூடு)ன்னு சொல்லலாம், ஆனா அடுத்த நிமிஷம்
செருப்போ அல்லது போலிஸோ பறந்து வரும், எதுக்கு வம்ப வெலைக்கு வாங்குறே.

இல்லப்பா, யாராவது சொன்னாத்தானே, அவங்களுக்கும் புரியும்.

இங்க பாரு, இந்த மாதிரி சொல்றதுக்குன்னே 'முதவ்வா'க்களை அரசாங்கம் வச்சிருக்கு.
இது அவங்க வேலை. மாத்திரமல்ல, சட்டம் கொண்டு அல்லது சாட்டை கொண்டு
தகாதவைகளைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையதல்ல, மாறாக‌ அது இஸ்லாமிய
அரசாங்கத்தின் கடமை. தனி மனிதனுக்கு, அவனுக்குக் கீழுள்ளவர்களைச் சத்தம்
போட்டுத் திருத்த அனுமதி உண்டு. இருந்தாலும் மென்மையான முறையில்
செய்யப்படும் அறிவுரைகள் தாம் நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். காரணம்
'மென்மையில் பரக்கத்(அபிவிருத்தி) இருக்கிறது'.

உன் பேச்சு எடுபட வேண்டுமென்றால், 'இறைவனின் இல்லத்தில் சத்தமிடாமல்
இருப்பவருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக' என்கிற தொனியில்
உன் உபதேசம் இருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் தனி மனிதனிலிருந்து அரசாங்கம் வரைக்கும் ஒவ்வொருவரும்
எப்படி நடக்க வேண்டும் என்று காட்டித் தந்திருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள்.

ஒரு முறை நபியின் மீது கடும் வெறுப்பு கொண்ட நிராகரிப்பாளர் ஒருவர், நபியை
ஒரு முறை பார்த்து விடும் எண்ணத்தில் மதீனா நோக்கி வந்தார்.வரும் வழியில்,
இருவர் சத்தமாக உரையாடுவதைக் கண்டு என்னவென்று அறிய எட்டிப் பார்த்தார்.
ஒருவர் ஏதோ விற்றுக் கொண்டிருக்க இன்னொருவர் வாங்குவதற்காகப் பேரம்
பேசிக் கொண்டிருந்தார்.

இவர் எட்டிப் பார்க்கும் நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, 'இந்தாளைக்
கண்டிப்பவர் யாருமில்லையா' என வாங்குபவர் போவோர் வருவோரிடம் முறையிட,
நபியைக் காண வந்தவர், 'அநியாயம் செய்யும் இந்த விற்பனையாளன்தான் நபியாக
இருக்கும்' என்று கணித்து அவரோடு சண்டையிட நினைக்கும் சமயத்தில், மிக
அழகான ஒருவர் அவ்விருவரை நோக்கி நெருங்குவதைக் கவனித்தார்.

அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'யாரசூலுல்லாஹ், இந்த ஆள் அநியாய விலை
சொல்கிறான்' என்று புகார் செய்ய, வியாபாரியை நபியென்று தவறாக எண்ணியவர்,
இப்போது நபி என்ன செய்யப் போகிறார் என்றரிய அருகில் வந்து கவனிக்கலானார்.
நபி சொன்னார்கள்,

'நல்ல பண்போடு வியாபாரம் செய்பவர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'நல்ல பண்போடு பொருளை வாங்குபவ‌ர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'

'விற்பவரும் திருப்தி அடைந்து வாங்குபவரும் திருப்தி அடையும்
வியாபாரம்தான் மிகச் சிறந்த (பரக்கத்துகள் பொருந்திய) வியாபாரம்
'.

வந்தவர் அசந்து விட்டார். இவ்வளவு சிம்பிளா,மென்மையாய்,அன்பாய்
எவ்வளவு பெறுமதியான விஷயத்தைச் சொல்லி விட்டார். யாரையும் கண்டிக்க
வில்லை, ஆனால் இருவரையும் ஒற்றுமைப் படுத்தி விட்டது அல்லாமல் மனித
சமுதாயத்திற்கே 'நல்ல வியாபார உத்தி'யைக் கற்றுத் தந்து விட்டாரே,
இவரல்லவா மனிதர் என்றவாறு நபியின் கை பற்றி மன்னிப்புக் கேட்டு
இஸ்லாத்தைத் தழுவினார் (ஹயாத்துஸ்ஸஹாபா).

(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

Monday, October 11, 2010

திருவள்ளுவர் நபியா இல்லை கவிஞரா

‍‍‍
இது ஒரு ஆராய்ச்சிப் பதிவல்ல மாறாக ஒரு எண்ணவோட்டப் பதிவு.
மனிதர்கள் வாழ்ந்த எல்லாப் பகுதிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக தீர்க்கதரிசிகள்
அனுப்பப் பட்டுள்ளனர் என்பது இஸ்லாம் கூறும் உண்மை. இந்தியப் பகுதியின் மிகப்
பெரிய நபியாக 'மஹா நுவு' என்றழைக்கப்பட்ட நூஹ்(அலை) என்பது தெரிய வருகிறது.
இது பழைய வேதப் புத்தகங்கள் என அழைக்கப் படும் ரிக்,சாம‌,யஜூர் மற்றும் அதர்வண வேதங்களில் காணப்படும் 'வெள்ளப் பிரளயம்', பைபிள் மற்றும் குர்ஆனிலும் விவரிக்கப் பட்டுள்ளதன் மூலம் கிடைத்த ஒரு அனுமானம்.

பழைய வேதப் புத்தகங்களை 'சுஹுபுகள் (ஏடுகள்)' எனவும், மூசா (Moses),தாவூது (David),
ஈசா (Jesus),முகம்மது (அலை) நபிகளுக்குக்குக் கொடுக்கப் பட்டவை நான்கு வேதப் புத்தகங்களாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இவை பற்றிய ஆராய்ச்சிப் புத்தகங்கள்
'அபூ ஆசியா' போன்றோரால் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. எனினும் இந்தப் பதிவு எழுதத் தூண்டியது, இயல்பான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரரான 'இதயம் பேத்துகின்ற'
பதிவர் ஜவஹரின் முயற்சியில் உருவான 'உருப்படு' புத்தக அறிமுகப் பதிவுக்குக் கொடுக்கப் பட்ட தலைப்பு ஏற்படுத்திய சிந்தனை.

ஒழுக்க நெறி கருத்துக்களுக்காகவும் சீரிய சிந்தனைகளுக்காகவும் திருவள்ளுவரையும்,
புத்தரையும் நபியாகக் கருதுவோரும் மறுப்பவரும் நம்மிடமுண்டு. பள்ளிக்கூடங்களில்
மனப்பாடம் செய்த குறள்கள் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ சினிமாப் பாடல்களில்
வந்தவை மட்டும் சரியாக நினைவில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான்,
'பல்லாண்டு வாழ்க' வில் வரும் 'ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்' பாடலின் ஆரம்ப வரிகள்,

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்'
'என்பும் உரியர் பிறர்க்கு'

'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
'மெய்வருத்தக் கூலி தரும்'

திருவள்ளுவரை நபியாகக் கருதிய நான், 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
என்ற வரியைச் சிந்தித்த போது 'தெய்வத்தால் கூட செய்ய முடியாத காரியத்தை ஒரு
மனிதனின் முயற்சி செய்து விடும் என்ற அர்த்தம் தொனித்ததால் 'நிச்சய‌மாக இவர்
நபியாக இருக்க முடியாது' என்ற முடிவுக்கு வந்தேன். பின்னொருநாளில் இந்தக்
குறளுக்கு யாரோ ஒருவர் இப்படி கருத்துரை எழுதியிருந்த‌தைப் படித்த போது
'அட இது நல்லாருக்கே' எனத் தோணியது.

"தெய்வத்தின் விதியில் இவனால் முடியாது என்று எழுதப்பட்டு இருந்தாலும்,
இறையிடம் அழுது பிரலாபித்து விதியை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்",

இக் கருத்து நம் ஹதீஸ்களில் காணப்படும்,

'தர்மம் தலை காக்கும்' (சதகா ரத்துல் பலா)
'பிரார்த்தனை விதியை மாற்றும்' (துஆ ரத்துல் களா)

கருத்துக்களுக்கு ஒட்டி வருவதால் மேற்கண்ட குறளின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு வந்தது.
மேலும் 'அகர முதல‌ எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' எனும் குறளில் வரும்
ஆதி பகவன் என்பது ஆதம் நபியைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. எனவே திருவள்ளுவர்,
நபியாக இருக்கலாம் அல்லது 'வேதங்களை'த் தொகுத்த வியாச முனிவரைப் போல் ஒரு
அறிஞராக இருக்கலாம் அல்லது நல்ல கருத்துகளைத் தொகுத்து வெண்பா வடிவில் வழங்கிய கவிஞராக இருக்கலாம் அல்லது ... அல்லது ..... அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

'அபூ ஆசியா'வின் புத்தகத்தில் படித்த ஞாபகம், குர் ஆனில் 'துல் கிஃப்ல்' என்ற நபியின்
பெயர் வருகிறது. லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களில் வெறும் 25 நபிமார்கள் பெயர்
குர்ஆனில் வருகிறது, அவற்றுள் ஒன்று 'துல் கிஃப்ல்'. கபிலைச் சார்ந்தவர் என்று பொருள்.
இது 'கபில'வஸ்துவைச் சார்ந்த புத்தரைக் குறிப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆக இவர்கள் நபிமார்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை
(தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்). என்றாலும் தசாவதாரி சொன்னது மாதிரி,

'நபியாக இருந்தால் நன்றாயிருக்கும்' :)

Tuesday, September 21, 2010

பார்டர் தாண்டிய பல்லாடு

(சென்ற உம்ரா பதிவின் தொடர்ச்சி)

பெருமானார்(ஸல்) அவர்களின் ஹதீஸ் ஒன்றின் கருத்து 'இந்த உம்மத்தின்
செல்வந்தர்கள் புகழுக்காகவும் பெருமைக்காகவும், ஏழைகள் பிச்சை எடுப்பதற்கும்
மத்திய வர்க்கத்தினர் வியாபாரம் செய்யும் நோக்கத்திலும் ஹஜ்/உம்ரா செய்வார்கள்.
(இம்மூன்று நோக்கங்களை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக,ஆமீன்).
அம்மூன்று தரப்பாரையும் காண நேரிட்டது ; அவர்களின் பேச்சும் நடத்தையும்
மேற்கண்ட நோக்கங்களைப் பறைசாற்றியது.

பார்டர் தாண்டியதும் மற்றுமொரு சாராரைக் காண நேரிட்டது. ஓமானிலிருந்து வந்த
பேமானிகள். பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். டொயோட்டா Lexus ல் வந்து 'உம்ரா வந்த
வழியில் எல்லாம் தொலைந்து விட்டதாகக் கூறி' பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
காருக்குள் மனைவி, குழந்தைகளை வைத்துக் கொண்டு கேட்கும் போது யாருக்குத்தான்
கொடுக்க மனம் வராது. பார்டர் தாண்டியவுடன் வரும் பெட்ரோல் பம்புகள்தாம் இவர்களின்
வசூல் வேட்டைக் களம். இது போன்று இரண்டு மூன்று கார்களைக் கண்டவுடன் நாங்கள்
கார் நம்பர்களைக் குறிக்கலானோம், போலிஸில் புகார் செய்யும் நோக்கத்தில். அச்சம‌யம்
ஒரு கார் ரிவர்ஸில் வந்தது, நம்பரைக் குறிக்கும் நண்பரை லேசாக இடித்துச் செல்லும்
வண்ணம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பாவம் பரிதாபத்திற்குரியவர்கள்,
பட்டதாரிகளாக்க வேண்டிய தம் மக்களுக்கு பிச்சைக்காரர்களாவதற்கான பயிற்சி
கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நபியவர்கள் சத்தியமிட்டு சொன்ன விஷயங்களில் இதுவும் ஒன்று,
'யாசிப்பவர்களின் வறுமை ஒரு போதும் நீங்காது'.

மக்கா மதீனாவில் பிச்சை எடுக்கும் கறுப்பின மக்கள் சோமாலியா போன்ற ஆப்ரிக்க
நாடுகளிலிருந்து வந்தவர்களாயிருக்கும்; ஆண்டாண்டு காலமாக சவூதியில் வாழும்
ஹபஷிகள் கிடையாதென்பது என் எண்ணம். காரணம் இரண்டு ஹரம்களிலும் நோன்பு
திறக்க வைக்கப் போட்டி போட்டுக் கொண்டு லட்சக்கணக்கான மக்களுக்கும் பேரித்தம்பழம்,
தண்ணீர்,டீ,காபி,பன்,தயிர்,மோர் வைத்து உபசரிப்பவர்களாக ஹபஷிகளைக் கண்டோம்.

ஒரு வேடிக்கை நிகழ்ந்தது. மதீனா பள்ளியில் நோன்பு திறக்கச் செல்லும் போது அங்குள்ள சிறுவர்களும் பெரியவர்களும் தம்முடைய இடத்தில் நோன்பு திறக்குமாறு நம் கையைப்
பிடித்து இழுப்பார்கள். ஒருநாள் எங்களுக்குத் தெரிந்த ஒருவர் இன்று தம்மிடத்திலே நோன்பு
திறக்க வேண்டும் என்றும் வேறு யார் இழுத்தாலும் சென்று விட வேண்டாமென்றும்
சொன்னார். நானும் சரியென்று செருப்புக்களை பிளாஸ்டிக் பைக்குள் வைத்தவாறு
(வெளியே வைக்கப்படும் செருப்புக்கள் கிளீனிங் போன்றவைகளால் குப்பைக் கூடையில்
சென்று விடும்) பள்ளிக்குள் செல்லும் போது ஒருவர் என்னை அழைத்தார். நானும்
புன்னகைத்தவாறே 'இல்லை இன்று இவரிடம்' என்று சைகை செய்த வண்ணம் முன்
சென்றேன். இப்போது என் கையைப் பிடித்து இழுக்க முயற்சித்தார், நானோ அதைத் தட்டி
விட்டு முன்னேறியவாறு திரும்பிப் பார்த்தேன். இப்போது அவர் கோபமாக வந்து என்
கையில் உள்ள பையைப் பிடுங்கி உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விட்டு,
'ஙொப்புரானே!, இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?' என்கிற தொனியில் புன்னகைத்துத்
திரும்பத் தந்து விட்டார். நானும் 'அடடா, செக்யூரிட்டின்னு தெரியாமப் போச்சேன்னு அசடு
வழிந்து உள்ளே சென்றேன் (செக்யூரிட்டிகளும் நார்மல் டிரஸ்ஸில்தான் இருப்பார்கள்).

பார்டர் தாண்டி இஸ்லாத்திற்குள் நுழைவிக்கப்படும் யஹூதிகளின் சூழ்ச்சிகளில்
ஒன்றையும் எடுத்துச் சொல்ல மனம் நாடுகிறது. அதுதான் இஸ்லாமிக் டிஸைன்களில்
அவர்கள் புகுத்திய உருவ வெளிப்பாடு. அன்றைய முஸ்லிம் பேரரசின் தலைநகரான
துருக்கியில் புகுந்து விட்ட இந்த தந்திர நரிகள் கார்பெட்,முஸல்லா மற்றும் கட்டிடக்
கலையில் உருவம் வரும் வண்ணமாக இஸ்லாமிய டிஸைனை அமைத்தார்கள்.
(இன்றும் ஆப்கானிஸ்தானில் மிஞ்சியிருக்கும் யஹூதிகளின் தொழில் கார்பெட்).
துருக்கியர்கள் புனரமைத்த ஹரம்களின் தூண்களையும் தொழுவதற்காக நாம் நிற்கும் கார்பெட்டுகளையும் கூர்ந்து கவனித்தால் உருவங்கள் தெரிய வரும். இவ்வளவு ஏன்,
கஃபாவைப் போர்த்தியிருக்கும் கருப்புத்துணியில் கதவின் அருகாமையில் உள்ள தங்க
டிஸைனைப் பாருங்கள். கண்களைப் போல் இரண்டு வட்டங்கள், மூக்கின் வடிவில்
திரை லேசாக விலகியிருக்க,அத‌ன் அடியில் இரண்டு வளையங்கள். மீசையின் இரு
மருங்கிலும் கருப்பு நிறப் பின்னணி, பின் செவ்வக வாய் அளவுக்குத் திறந்த பகுதியில்
மூடிய கதவும் தெரிகிறது. (ஓவரா திங்க் பண்றேனோ !?)

ஆனாலும் அல்ஹம்துலில்லாஹ், சமீபத்தில் கட்டப்பட்ட ஸபா மர்வாவை ஒட்டிய
சுவர்களிலும் அதில் பொறுத்தப்பட்டுள்ள சன்னல்களிலும் உருவமற்ற, அழகான
இஸ்லாமிய டிசைன்கள், மக்கள் உஷாராகி விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
மேலும் தவாபின் எல்லையைக் கூட்ட, கஃபாவை ஒட்டிய் துருக்கியர்கள் கட்டிய
பகுதியும் விரைவில் இடிக்கப்பட இருக்கிறது என்ற செய்தியும் அறியக் கிடைத்தது.

(இ.அ. தொடரும்)

Wednesday, September 15, 2010

ஹரமைனும் இரண்டாயிரம் கி.மீ தரைவழி காருந்து மார்க்கப் பயணமும்

வாழ்வில் முதன்முறையாக ரமலானில் உம்ரா செய்யும் பாக்கியம்
கிடைத்தது. ரமலானில் உம்ரா செய்வது பெருமானாருடன் ஹஜ்
செய்வதற்க்குச் சமம் என்று சொன்னதுதான் போதும் மக்கள்
லட்சக்கணக்கில் குவிந்து விடுகிறார்கள் ஒவ்வொரு ரமலானிலும்.

நாங்கள் நால்வர் டொயோட்டா கேம்ரியில் முதலில் மதீனா முனவ்வரா
பின் மக்கா முகர்ரமா சென்று உம்ரா நிறைவேற்றி திரும்பும் வழியில்
ஜித்தா,ரியாத்,தமாம் சென்று உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து
விட்டுத் திரும்பியது வாழ்வின் உன்னதத் தருணங்களில் ஒன்றாகும்.

* * * * * * * * * * * * * * * *

ரமலான் உம்ரா அதீத திருப்தி தரக் காரணம் தராவீஹும் கடைசிப்பத்தின்
கியாமுல் லைல் மற்றும் அழுகையுடன் அமைந்த கூட்டு துஆக்களும்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக நம் செவிகளுக்கு அமுதூட்டி வரும்
ஷேக் ஷ்ரைமும் ஷேக் சுதேஸும் கியாமுல்லைலில் விருந்து
படைத்தார்கள். தராவீஹில் ஷேக் மாஹிரும் இன்னொருவரும் மனதுக்கு
இதமாக கிராஅத் மழை பொழிந்தார்கள். இவர்களை மட்டும் அறிந்த எனக்கு
இம்முறை புதியதாக ஒருவரைக் கேட்க சந்தர்ப்பம் வாய்த்தது. அவர்,
மதீனாவின் ஷேக் ஸலாஹ் அல்புதைர். வாவ், எல்லோரையும் தூக்கிச்
சாப்பிட்டு விட்டார் மனுஷன். ஷ்ரைமுடைய Grand குரலும் சுதேஸுடைய
நளினமும் மாஹிருடைய மென்மையும் கலந்த குரல், மாத்திரமல்ல கல்
நெஞ்சக்காரர்களையும் அழ வைக்கும் துஆ செய்யக்கூடியவர். மதீனாவில்
இவருடைய துஆவின் போது அழுத அளவுக்கு மக்காவில் சுதேஸின்
துஆவின் போது அழவில்லை. (ஒரு வேளை முதலில் மக்கா சென்று பின்
மதீனா சென்றிருந்தால் vice versa வாக இருந்திருக்குமோ ?)

* * * * * * * * * * * * * * * *

பெண்களின் வருகை 50 சதவீதமா அல்லது ஆண்களை விட அதிகமோ
என்று எண்ணும் அளவுக்கு அதிகமாக வந்திருந்தனர். அது மட்டுமல்ல‌
ஹஜருல் அஸ்வதின் அருகில் செல்ல முண்டியடித்தவர்களில் 15 சதவீதம்
பெண்கள். அஸருக்குப் பின், நோன்பு திறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு
முன் எனது நண்பர் சொன்னார் 'கஃபாவைப் பார்த்துக் கொண்டிருப்பதும்
நன்மை தரக் கூடிய வணக்கமாகும், வாருங்கள் அதனருகில் சென்று
அமர்ந்து கொள்ளலாம்.' என்று.

ஆனால் கடுமையான கூட்டமும் அதனைக் கட்டுப்படுத்தும் காவலர்களின்
கெடுபிடிகளாலும் எங்களால் கஃபாவைக் காணும் வகையில் நிற்கவோ
உட்காரவோ முடியாமல் பின்னேறி நாங்கள் அமர்ந்த இடம் பெண்கள்
அதிகமாக இருந்த இடம். நண்பர் சொன்னார் 'என்னங்க இது, நன்மையை
நாடிச் சென்றோம், விதி பாவத்தின் பக்கம் இழுத்து வந்து விட்டதே.
அதுவும் நோன்பு திறக்கும் நேரம் பார்த்து.
திடீரென எனக்குள் ஒரு ஞானப் பொறி தட்ட :) , நான் சொன்னேன்.

'பாய், அதுவோ ஹரம்; அதனைப் பார்த்தால் நன்மை ,
இதுவோ ஹரீம் (பெண்) ; இவர்களைப் பார்க்காமல் இருந்தால் நன்மை.
எனவே இரண்டிலும் நன்மைகள்தாம், கவலைப்படாதீர்கள் :)

(பெண்களின் எதிரில் இருந்து கொண்டு அவர்களைப் பார்க்காமல் இருப்பதும்
நமக்குள் கட்டுப்பாடு வருவதற்கான பயிற்சிதான்).

ஹரம்(புனித பகுதி),ஹராம்/மஹ்ரம்(தடுக்கப்பட்ட),ஹரீம்/ஹுருமா(பெண்)
இவையெல்லாம் ஒரே எழுத்திலிருந்து வந்தவையென நினைக்கிறேன்.
(அரபி பண்டிதரின் ஒப்புதலையோ/மறுதலித்தலையோ எதிர் பார்க்கிறேன்)

பெண்களை இஸ்லாம் எந்தளவு கண்ணியப்படுத்த அல்லது பாதுகாக்க
நினைக்கிறது என்பதை மேற்கண்ட‌ சொற்களைச் சிந்திப்போருக்குத் தெரியவரும்.

* * * * * * * * * * * * * * * *

இங்கு இரக்கப்பட வேண்டியவர்கள் ஹரமிலும்,அதனைச் சுற்றியுள்ள்
ஹோட்டல்களிலும் கிளீனிங் வேலை பார்ப்பவர்கள். பாவம் மக்காவில்
வேலை மதீனாவில் வேலை என்று ஆர்வமாக வந்தவர்களுக்கு இங்குள்ள
வேலைப் பளுவில் பெண்டு நிமிர்ந்து விடுகிறது, அதுவும் வேலைப் பணிகள்
குறைக்கப் பட வேண்டிய ரமலான் மாதத்தில். மேலும் பெண்களை
அதிகமாகப் பார்த்து மனம் கெடுவதும் பயணிகளில் சிலர் இரக்கப் பட்டுக்
கொடுக்கும் டிப்ஸ்/ஸதகா வாங்கிப் பழகி, அதை எல்லோரிடமும்
எதிர்பார்த்து, பின் வாய் விட்டே கேட்கும் அளவுக்கு மாறிப் போகிறார்கள்.
புனிதப் பகுதியைக் கழுவிப் புண்ணியம் தேட வந்து மனம் குப்பையாய்
போனதை அறியாமல் வேண்டா வெறுப்பாக வேலை செய்து வரும்
இவர்களை நினைத்து இரக்கப் படாமல் என்ன செய்வது.

உச்சமாக‌, பெருநாள் இரவில் சுத்தம் செய்கிறோம் பேர்வழி என்று
ஆங்காங்கு மாட்டி வைக்க‌ப்பட்ட பைகளையும் பொதிகளையும் பிளாஸ்டிக்
கீஸ்களையும் பிய்த்தெடுத்து குப்பைத்தொட்டியிலோ அல்லது வெளியே
சில மீட்டர் தூரம் கொண்டு சென்று ஒரு மூலையிலோ போட்டு விட்டதால்,
பயணிகள் தமது கடவுச்சீட்டு,பர்ஸ்,செல்போன்,புதிய/பழைய துணிமணிகள்,
உறவினர்களுக்காக வாங்கி வைத்திருந்த்த பொருட்கள் அனைத்தும் நிறைந்த
அல்லது இவற்றில் ஏதோ வைத்திருந்த பை காணாது தவித்து பின்
எடுத்தவர்களைச் சபித்து ..., வேண்டாம்பா,
இந்த சாபத்தை வாங்குவதை விட சம்பாதிக்காமலே இருந்து விடலாம்.

(தொடரும்)

Wednesday, August 11, 2010

பொன்னும் கெடச்சுது புதனும் கெடச்சுது

......................................................................
காலம் பொன் போன்றது (கடமை கண் போன்றது)
......................................................................

அதுவும் ரமலானின் காலம் 'தேடிக் கிடைக்காத தங்கம்' போல. கிடைத்து
விட்டால் அதுவே பெறும் பேறு. நபியவர்கள் இப்படி துஆ கேட்பார்களாம்.

"இறைவா ரஜப்,ஷஃபான் மாதங்களில் பரக்கத் (அபிவிருத்தி) செய்வாயாக,
ரமலானை அடையும் பாக்கியத்தைத் தருவாயாக"

அனுபவமா அல்லது ஐதீகமா தெரியாது, சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்,
ரமலானுக்கு முந்திய மாதமான ஷஃபானில் இறந்து போகும் வயதானவர்களின்
அல்லது நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று.

ஆதலால் ரமலானை அடைந்தவர்கள் பெறும் பாக்கிய சாலிகள்.
மட்டுமல்லாது இம் மாதத்தில் கிடைக்கும் நன்மைகளின் எண்ணிக்கை
மற்றும் மன்னிக்கப்படும் பாவங்களின் எண்ணிக்கை கணிணியில்
அடங்காது. இந்த மாதத்தில்தான் ஒரு நாள் இருக்கிறது, அந்த நாள்

எழுபது தாய்களின் பாசத்தை உடைய ஜனாதிபதியின்
கண்டிப்பு நிறைந்த தந்தை மனம் கொண்ட சர்வாதிகாரியின்
சட்டம் ஒழுங்கை ஏற்படுத்தி நிர்வகிக்கும் பிரதம மந்திரியின்
அரசர்க்கெல்லாம் அரசனான அந்த அல்லாஹ்வின்

ஆயிரம் மாதங்களுக்கு நிகரான ஒரு

'பொது மன்னிப்பு தினம்'.

இதுவும் கிடைத்து விட்டால் பொன் கிடைத்து, புதன் கிடைத்து,
புதையலும் கிடைத்த மாதிரி; முயற்சிப்போமா .

ரமலான் கரீம் !!

----------------------------------------------------------------------


சென்ற மாத ஜும்ஆ/குத்பா பேருரையில் கேட்ட/மனதில் தங்கிய
சில நல்ல கருத்துக்களை இங்கே பதிவிடுகிறேன்.

வெற்றிக்கான மூன்று நல்ல விஷயங்கள் (முனஜ்ஜியாத்)
......................................................................

1.
கோபமான சமயத்திலும், மகிழ்ச்சியான தருணத்திலும்....நீதமாக நடத்தல்

2.
வறிய நிலையில் கஞ்சத்தனமோ அல்லது செல்வ நிலையில் வீண்
விரயமோ செய்யாது எல்லா நிலையிலும் ஒரே மாதிரியாகச் செலவழித்தல்

3.
ரகசியத்திலும் பரகசியத்திலும் (தனிமையிலோ / மற்றோரின் முன்னோ)
இறைவனுக்குக் கட்டுப்படும் தன்மையில் வித்தியாசமில்லாமல் இருப்பது



அழிவைத்தரும் மோசமான ஏழு விஷங்கள்.
.....................................................................

1. இறைவனுக்கு இணை வைப்பது

2. பில்லி சூனியம் செய்வினையில் ஈடுபடுவது

3. கொலை செய்வது

4. வட்டி வாங்கி சாப்பிடுவது

5. அனாதைகளின் பொருளைச் சாப்பிடுவது

6. போரில் புறமுதுகிட்டு ஓடுவது

7. பத்தினிப் பெண்ணை அவதூறு செய்வது


----------------------------------------------------------------------


ஹூம், ஏதோ ஒரு உந்துதலில் பதிவெழுத வந்து, வந்த வேகத்தில்
பன்னிரண்டு பதிவு போட்டுப் பின் குறைந்து தேய்ந்து ஒரே ஒரு
கட்டெறும்பாகியிருக்கிறது. பார்க்கலாம் இனி அடுத்தமாதம்
இந்தப் பிறை மீண்டும் வளருமா என்று.


இன்ஷா அல்லாஹ், ஒரு மாதத்திற்கு இந்தப் பக்கம் வர மாட்டேன்.
அதனால‌ போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்த சொல்லிட்டு போறேன்,
.
.
.
.
.
.
.
.
.
v


'போயிட்டு வாறேன்' (இன்ஷா அல்லாஹ்) :-)



ரமலான் & ஈத் முபாரக்,
வஸ்ஸலாம்.

Wednesday, July 28, 2010

இறைவன் பற்றிய கேள்விகள் அன்றும் ... என்றும்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பொரு நாளில்,

இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்)எனப்படும் ஆபிரகாமிடத்தில்
நம்ரூது மன்னன் கேட்டான் 'நீ கூறும் கடவுள் எத்தகையவன் ?'.

'என் இறைவன் தான் நாடியதைச் செய்கிறான். உயிரில்லாதவற்றிற்கு
உயிர் கொடுக்கிறான், உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்கிறான்.'

உடனே நம்ரூது, சிறையிலிருந்து இருவரை அழைத்து வரச் செய்து,
அவர்களில் மரண தண்டனைக் கைதியை விடுதலை செய்து சில நாட்களில்
விடுதலையாக இருந்தவனைக் கொல்லுமாறு ஆணையிடுகிறான்.

இப்போது இப்ராகீமை நோக்கி,'பார்த்தாயா! நான் நாடியதைச் செய்தேன்.
ஒருவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்தேன் இன்னொருவனின் உயிரை
எடுத்தேன். ஆதலால் நானும் கடவுள்தான் என்று நம்புகிறாயா'.

'என் இறைவன், சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்து மேற்கில்
மறையச் செய்கிறான், உமக்கு முடியுமானால் அதனை மாற்றிக் காட்டவும்'.

இதற்கு பதில் சொல்ல முடியாத நம்ரூது, இவரை நெருப்பிலிட்டுப்
பொசுக்குங்கள் என்று ஆணையிட்டான்.

ஆனால் நடந்தது என்ன ?
இப்ராகீம் நெருப்புக்குள் போடப்பட்டும் எரியாமல் தப்பித்து நீண்ட நாட்கள்
வாழ்ந்தார். நம்ரூது மன்னனோ செருப்படி வாங்கியே கேவலமாகச் செத்தான்.
செருப்பால் அடித்தால் மட்டுமே மண்டைக் குடைச்சலிருந்து சிறிது நேரம்
நிவாரணம் என்ற நிலை கண்டு செருப்பால் அடிப்பதற்காகவே சில
வேலைக்காரர்களை நியமித்திருந்தான்.

-------------------------------------------------------------------

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பொரு நாளில்,

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) என்கிற மோசஸிடம் 'நானல்லவா உனது
இறைவன் நீ வேறு யாரையோ இறைவன் என்றும் அவனுடைய தூதராக
உன்னைச் சொல்கிறாயே, அத‌ற்கு என்ன ஆதாரம்' என்று கேட்ட
பிர் அவுன் என்கிற பாரோ மன்னனுக்கு முன் தனது கைத்தடியை எறிந்த
போது அது பாம்பாக மாறிய்து. மேலும் மூஸாவின் கையிலிருந்து ஒரு
பிரகாசம் கிளம்பியது. இதைப் பார்த்த பிர்அவ்ன்,'பூ இவ்வளவுதானா,
மவனே உன்னை விட மேஜிக் தெரிந்தவர்கள் என்னிடத்தில்
ஆயிரக்கணக்கில் உண்டு' என்று எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தனக்கு
விசுவாசமான மந்திரவாதிகளை அழைத்து வரச் செய்தான்.

அவர்களும் மூஸா செய்தது போலவே தமது கைத்தடிகளை எறிந்து
பாம்பாக மாற்றிக் காட்டினார்கள். இப்போது மூஸா(அலை) தமது
கைத்தடியை எறிந்தார்கள். அது மிகமிகப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பாம்பாக
மாறி எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மந்திரவாதிகளின் பாம்புகளை
விழுங்கி கபகளீகரம் செய்தது. இதனைப் பார்த்த மாத்திரத்திலேயே
ஆயிரக்கணக்கான மந்திரவாதிகளும் மண்ணில் விழுந்து இறைவனைப்
போற்றி மூஸாவின் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
கடுங்கோபம் கொண்ட பிர்அவ்ன் முஸ்லிம்களைத் துரத்திக் கொண்டு
செல்லும் போது லட்சக்கணக்கான படைவீரர்களோடு நைல் நதியில்
மூழ்கிப் போனான். மூஸாவும் அவரை நம்பியவர்களும் இறை அருளால்
நைல் நதியைக் கடந்து வேறிடம் சென்று நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.

-------------------------------------------------------------------

ஆயிரத்து இருநூறு வருடங்களுக்கு முன்பொரு நாளில்,

அதிகாரத்தில் இருந்த ஒருவன், இறைவன் இருப்பதை தன் புத்திக்கு
எட்டுமாறு நிருபிக்க வேண்டும் என்றும் ஆனால் குர்ஆனிலிருந்தோ
ஹதீஸிலிருந்தோ எதுவும் சொல்லக்கூடாதென்றும் விட்ட சவாலை நுஃமான்
என்னும் வாலிபர் ஏற்றுக்கொண்டார். நிரூபிக்க நாளும் குறிக்கப் பட்டது.
ஆனால் அந்த நாளன்று நுஃமான் வர மிக மிகத் தாமதாகியது. கடைசி
நேரத்தில் வந்த நுஃமானிடம், தாமதம் பற்றிக் கேட்கப் பட்டது.

"சபையோர் மன்னிக்க, நான் வரும் வழியில் நதி ஒன்று உண்டு. ஆனால்
அதனைக் கடந்து வர படகு போன்று எதுவும் அங்கிருக்கவில்லை. என்ன
செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென அங்கிருந்த
மரத்திலிருந்து மரக்கிளைகள் ஒவ்வொன்றாகக் கீழிறங்கிப் பின் ஒன்றாகச்
சேர்ந்து படகாகியது. அதன் மூலமாக ஆற்றைக் கடந்து வந்தேன். படகு
உருவாவதில் மிக நீண்ட நேரம் பிடித்ததால் இங்கு வரத் தாமதமாகி விட்டது.

இந்தப் பதிலைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆகா, ஏதோ 'கிராக்'
அல்லவா வந்திருக்கிறது என்ற சந்தேகத்தோடு, 'ஏம்பா, உனக்கே இது
ஓவராத் தெரியலயா, எப்படி இதுவெல்லாம் தானா உருவாகும்? என்றார்கள்.
அதற்கு நுஃமான் புன்னகைத்தவாறே 'இதைத்தான் நானும் கேட்கிறேன்,
இந்தப் பூமி,வானம்,சூரியன்,சந்திரன்,கோள்கள்,நட்சத்திரங்கள்,மலைகள்,
கடல்கள்,மனிதர்கள்,விலங்குகள்,பறவைகள் இன்னும் எத்தனை
எத்தனையோ கண்ணுக்குத் தெரிந்த தெரியாத‌ ஜீவராசிகள் எப்படித் தாமாக
உருவாகியிருக்க முடியும். உங்களுக்கே இது ஓவராகத் தெரியவில்லையா !

இதற்குப் பதில‌ளிக்க முடியாமல் அடுத்தக் கேள்வியைக் கேட்டனர்.

'சரி, இறைவன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்,ஆனால் அவன் எங்கு
இருக்கிறான் ; எந்தப் பக்கம் அல்லது யாரைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்?"

இதற்குப் பதிலாக அனைவரையும் ஒரு இருட்டறைக்குள் அழைத்துச் சென்று,
விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, 'இப்போது சொல்லுங்கள்,
இந்த ஒளி அல்லது வெளிச்சம் எங்கிருக்கிறது ; அது எந்தப் பக்கம் பார்த்துக்
கொண்டிருக்கிறது ?. ம், ஒரளவு புரிந்தது விட்டது. இனி அடுத்த கேள்வி
'இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் ?.

"இதற்குப் பதில் தருவதற்கு முன் நீங்கள் என்னிடத்திற்கு இறங்கி வர
வேண்டும் ; நான் தங்களின் நாற்காலியில் அமர வேண்டும், சம்மதமா ?"

கேள்வி கேட்டவர் இறங்கி வர நுஃமான் நாற்காலியில் அமர்ந்து கொண்டு,
"இப்போது இறைவன் தங்க‌ளைப் பதவியிலிருந்து இறக்கி என்னை அந்தப்
பதவியில் அமர்த்தினான்".

பிறகு அனைவரும் மனம் (மதம்?) மாறியதைச் சொல்லவா வேண்டும்.

------------------------------------------------------------------

சில வருடங்களுக்கு முன் கம்யூனிஸம் தழைத்திருந்த நாளொன்றில்,

சவூதி அல்லது அதன் சகோதர நாட்டின் பள்ளிக்கூடம் ஒன்றின்
வகுப்பறையில் எகிப்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர், மாணவர்களிடம்
வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு பொருளையும் சுட்டிக்காட்டி என்னவென்று
கேட்க, ஒவ்வொன்றின் பெயர்களையும் மாணவர்கள் சொல்லிக் கொண்டு
வந்தார்கள். கடைசியாக ஆசிரியர், "மாணவர்களே! இவையத்தனையும்
கண்ணால் காண்கிறோம்; அதன் பயன்களை அறிகிறோம். ஆனால்
இறைவன் என்று ஒன்றை நம்புகிறோமே அதனைக் கண்ணால் காண
முடிகிறதா அதன் பலன்களைப் பெற முடிகிறதா ? அத‌னால் இறைவன்
என்று ஒன்றும் கிடையாது; இதை யாராலும் மறுக்க முடியுமா ?" என்றார்.

அப்போது ஒரு மாணவன் எழுந்து நின்று "நம்ம வாத்தியாருக்கு மூளையே
கிடையாது; ஏனென்றால் அதனை நம்மால் காண முடியவில்லை".
இந்த பதிலால் வாத்தியும் மாணவர்களும் திகைத்துப் போனார்கள்.

--------------------------------------------------------------------

வரலாற்றின் ஏதோ ஒரு நாளில்,

மெத்தப் படித்த ஒருவன் தன்னிடம் 'இறையின் இருப்பை'ப் பற்றிய‌
மூன்று கேள்விகள் இருப்பதாகவும் அதற்குப் பதில் கிடைக்காத வரை
'இறை மறுப்பை'க் கைவிடப் போவதில்லை என்றும் எல்லா
அறிஞர்களிடமும் சென்று சவால் விட்டுக் கொண்டிருந்தான். அறிஞர்
ஒருவர் அவனிடம் அந்த மூன்று கேள்விகள் யாவை எனக் கேட்க,

1. இறைவன் உண்டா ? அப்படியிருந்தால் அவனை நீங்கள்
எனக்குக் காட்ட வேண்டும்.
2. 'விதி'யென்பது யாது ?
3. ஷைத்தான் நெருப்பால் படைக்கப் பட்டதாகவும் இறுதியில் நெருப்புக்
கங்குகளால் நிரப்பப்பட்ட நரகத்தைச் சென்றடைவான் என்றும்
இஸ்லாம் கூறுகிறதே ! நெருப்பு எப்படி நெருப்பால் படைக்கப்
பட்டவனுக்குத் தண்டனையாக அமையும் ?

சிறிது நேரம் யோசித்த அறிஞர், கேள்வி கேட்டவனுக்கு ஒரு அறை
கொடுத்தார். 'ஆ! என்று அலறியவனை நோக்கி 'வலிக்குதா!' என்று
கேட்க அவனும் கோபத்துடன் தலையசைக்க, 'வலிப்பது உண்மையானால்
அந்த வலியை எனக்குக் காட்டு' என்று அறிஞர் சொல்ல, 'அதெப்படி காட்ட
முடியும், வலியை உணரத்தான் முடியும்' என்றவுடன், 'இதுதானப்பா
உன்னுடைய முதல் கேள்விக்கு பதில், இவ்வுலகில் இறைவனைக்
காட்டவோ அல்லது பார்க்கவோ இயலாது; உணரத்தான் முடியும்.

'விதி' பற்றிய அடுத்த கேள்விக்கு, 'நான் உன்னை அடிக்கப் போவதை
முன்பே அறிவாயா' எனக்கேட்க அவன் இல்லையென்று தலையாட்டினான்.
"நீ மட்டுமல்ல, நான் உன்னை அடிக்கப் போகும் விஷயம் எனக்கும்
தெரியாது; ஆனால் இது இறைவனால் முன்பே எழுதப் பட்ட விஷயம்,
நாம் அறியாமலே நடந்தேறியிருக்கிறது, அது தான் 'விதி' என்பது.

அடுத்து என்னுடைய கையும் அடி வாங்கிய உன்னுடைய கன்னமும்
எதனால் ஆனவை. இரண்டுமே மண்ணால் படைக்கப் பட்டவை அல்லவா
இருந்தும் உனக்கு வலிக்கிறதே அது போலத்தான் ஷைத்தானுக்கும்
வலிக்கும், போதுமா :-‍) (இதற்கு மேல அவனால் என்ன சொல்ல முடியும்).

---------------------------------------------------------------------

இன்னும் எத்தனையோ சம்பவங்கள் கேள்வி பதில்களால்
நிரம்பியிருக்கின்றன. இருந்தும் இறை மறுப்பாளர்களாலும்
இணை வைப்போராலும் கேள்விகள் கேட்கப்பட்டுக்
கொண்டே.....யிருக்கின்றன. காரணம் 'தாம் நாடியவரை
நேர்வழியில் செலுத்துகின்றோம்' என்று அல்லாஹ் கூறுவதால்
'எல்லோருக்கும் நேர்வழி கிடைக்கும்' என்று எதிர்பார்க்க முடியாது.

டிஸ்கி 1 :
ஏண்ணா! அப்படீண்ணா கேள்வியே கேட்கக்கூடாதான்னு கேட்கப்படாது !

ஏன்னா, இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொல்லப் பட்ட இப்ராகீம் அவர்களே
கேள்வி கேட்டவர்கள்தாம், ஆனால் அறிந்து கொள்ள வேண்டி தம்மைத்
தாமே கேட்டுக் கொண்டார்கள், ஆராயும் விதத்தில். இரவில் நட்சத்திரம்
மின்னுவதைப் பார்த்து 'இது இறைவனாக இருக்குமோ ? அதன் பின் வந்த
நிலவைப் பார்த்து, இல்லையில்லை, இதுதான் இறைவனாக இருக்கும்
என்று நம்பினார். பின்னர்,காலையில் சூரியனைப் பார்த்து 'ஓ, இதுதான்
பெரியது, இதுதான் இறைவன், மற்றதெல்லாம் மறைந்து விட்டன. பிறகு
சூரியனும் மறைந்த போது,'இறைவா! நான் உன் பக்கம் திரும்புகிறேன்.
எனக்கு நேர்வழி காட்டுவாயாக! என்று இறை ஞானம் கிடைக்கும் வரை
தமது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.

டிஸ்கி 2 :
இவ்வளவு சொல்லியும் மனம் சமாதானம் அடையவில்லையா இறை
மறுப்புச் சகோதரர்களே! உங்களுக்குள் பின்வருமாறு சொல்லிப் பாருங்கள்
'முஸ்லிம்கள் சொல்வது போல் அப்படி ஒரு நீண்ட முடிவில்லாத
வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது ? '

வஸ்ஸலாம்.

Monday, May 31, 2010

நற்'சிம்' கார்டும் நம்பகமான நெட்வொர்க்கும்

நற்சிம் ?, நல்ல சிம் கார்டைச் சொன்னேன் :-)

ஓரிடத்திற்கு செல் பேச வேண்டும். அதற்கு செல்பேசியும் சிம் கார்டும்
தேவை அல்லவா ! பேசுவதற்கு முன் சார்ஜ் இருக்கா இல்லையா என்று
சோதித்தபின் தேவைப்பட்டால் சார்ஜ் செய்து கொள்வோம்.

பிறகும் பேச முடியவில்லை என்றால் நெட்வொர்க்கைச் சரிபார்ப்போம்.
இதற்குப் பிறகும் பேச முடியவில்லையென்றால் நம் கணக்கில் போதிய
பைசா இருக்கா என்று பார்த்து அதையும் நிரப்பிக் கொள்வோம்.

இப்போ லைன் கிளியர்.

அது போலத்தான் இறைவனோடு பேசுவதற்கு 'கல்பு' என்னும்
செல்லுக்குள் 'இறை நம்பிக்கை' என்ற சிம் கார்டு வேண்டும். அதனை
அடிக்கடி புதுப்பிக்க வேண்டும். அதாவது சார்ஜ் செய்ய வேண்டும்.
(உங்கள் ஈமானைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்-நபிமொழி).

பிறகு நெட்வொர்க்,

நமக்கும் இறைவனுக்குமிடையில் நல்லிணைப்பை ஏற்படுத்திக்
கொள்ள வேண்டும். (மன் அஸ்லஹ பய்னஹூ வ பய்னல்லாஹ் ‍-
யார் தமக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் தொடர்பைச் ச‌ரி செய்து
கொள்கிறார்களோ அவருக்கும் மற்ற படைப்பினங்களுக்குமிடையில்
சுமுகமான பிணைப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்-நபிமொழி)

பிறகு அக்கவுண்டில் பைசா Top Up , தொழுகை,தர்மம் மற்றும்
நற்கருமங்களைச் செய்து அனுப்பி வைத்த பின் பேசும் பேச்சுக்கு,
கேட்கும் தேவைக்கு ஒரு 'கெத்து' இருக்கும்.



"நம்பினார் கெடுவதில்லை ; நான்கு மறை தீர்ப்பு இது"

"கேளுங்கள் தரப்படும் : தட்டுங்கள் திறக்கப் படும்."

"கேட்பது நம் கடமை ; கொடுப்பது அவன் உரிமை"


ஆனா கேட்பதற்கு முன்னால் எல்லாவற்றையும் சரிபார்த்துக்
கொள்ளுங்கள். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.


வஸ்ஸலாம்.
------------

Tuesday, May 18, 2010

பூட்டனின் மாறாத விதியும் புனைவாக சில‌ நிஜங்களும்

ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு வீட்டை அமைத்தார். சிலரோடு
செல்லப் பிராணிகளையும் அவ்வீட்டில் குடியிருக்க வைத்து ஏதோ
ஒரு நோக்கத்திற்காக தான் மட்டும் தனியாக தூரத்திலிருந்து கொண்டு
அவ்வீட்டைக் கண்காணிக்கலானார். அவ்வப்போது அறிவுரை மற்றும்
அறவுரை தாங்கிய கடிதங்களைத் தூதுவர் மூலம் அனுப்பி வைத்தார்.
அவற்றில் சில‌ ஆங்காங்கு எழுதி வைக்கப் பட்டன.


" தர்மம் தலை காக்கும் "

" நீ வாழ பிறரைக் கெடுக்காதே "

"பிறர்கின்னா முற்பகல் செய்யின் ; தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"

"மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால்
கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின,
(தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள்
செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்)
அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.(அல்குர்ஆன் 30:41)"


* * * * *


எல்லோரும் ஒரு நாள் நகரத்திற்குத் திரும்ப வேண்டும், அங்கே கோர்ட்,கேஸ்,தண்டனை,பரிசளிப்பு உண்டு என்றாலும் தற்காலிகமாக
இங்கே வசிப்பதற்கான விதிகளும் எச்சரிக்கைகளும் விதிக்கப் பட்ட
நோக்கம் பிரச்னைகளில்லாத சுமுகமான வாழ்விற்காகவும்தான்.


வீட்டினரோ வீட்டு மிருகங்களோ காட்டிற்குள் செல்ல முடியாதவாறு
ஒரு வேலியிடப்பட்டது. அவ்வேலி எல்லோருக்கும் பொருந்தாது.
எனவே அவரவருக்குப் பொருந்தும் படியான வேலிகளை ஒன்றன் பின்
ஒன்றாக அமைக்கப் பட்டது.





அதே சமயம் காட்டிலிருந்து ஆபத்தான எதுவும் வந்து விடக்கூடாதென்று
கடைசி வேலி மிகக் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்க‌
கரண்ட் ஷாக் வைத்து அமைக்கப் பட்டது.





வேலிகளின் மறு பெயர் பிரச்னைகள். அவற்றிற்கு சுகக்குறைவு,தடை,தவிப்பு,எரிச்சல்,பசி,பட்டினி,பஞ்சம்,கஷ்டம்,
துன்பம்,சோகம்,வலி,வேதனை எனப் பெயரிடப்பட்டாலும்
கடைசி வேலியின் பெயர் 'ஆபத்து'.

"மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டு பெரிய
வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே
(இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச்
செய்வோம். (அல்குர்ஆன் 32:21)"


* * * * *


எல்லா வலிகளுக்கும் ஒரு காரணம் உண்டு. வலிக்கான காரணத்தைக்
கண்டறியாமல் வலிகள் மரத்துப் போகும் அளவுக்கு தோல் தடித்து
மனம் தொலைத்து 'வேலி தாண்டிய வெள்ளாடு' போல் போய்க்
கொண்டே இருந்தவர்களின் முடிவு மோசமாகவே இருந்தது.

'பட்டு'த் திருந்தியவர்களும் படும் முன்னே
'திரும்பி'யவர்களும் பிழைத்துக் கொண்டார்கள்.


காலச்சக்கரம் வடிவமைத்து வைத்தாற் போலவே சுழன்றது.
இந்நிலையில் வீட்டிலிருந்தோர் பலவாறாகப் பிரிந்தனர்.
தமக்குள் எல்லைகள் வகுத்துக் கொண்டனர்.


1)
அறவுரைகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தோர்

2)
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம்
கிடையாது என்று தன்னிச்சையாக இஷ்டப்படி வாழ்ந்தோர்

3)
என்னைக் கட்டுப்படுத்துவதற்கு யாருக்கும் அதிகாரம்
கிடையாது என்றாலும் மனசாட்சியின் படி வாழ்ந்தோர்

4)
அறவுரைகளுக்குக் கட்டுப் பட்டு வாழ்ந்தோரை எள்ளி
நகையாடி அவர்களுக்கு அடிக்கடி ஊறு விளைவித்து
வாழ்ந்தோர்

5)
அறவுரைகளை மதித்தாலும் எச்சரிக்கைகளை
அலட்சியப்படுத்தி மனோ இச்சையின் வழிப்பட்டு
வாழ்ந்தோர்

6)
யாரால் அனுப்பப் பட்டோம் எதற்காக அனுப்பப் பட்டோம்
என்பது தெரியாமல் கதைகளையும் கற்பனைகளையும்
'கண்டதே காட்சி கொண்டதே கோலம்' என்று
அப்பாவித்தனமாகவும் அடாவடித் தனமாகவும் வாழ்ந்தோர்.


இவர்களுக்குள்

அடிக்கடி தகறாறு நிகழ்ந்து கொண்டிருந்த‌து,

'புனைவு நிஜமாகும் வரை'.

Wednesday, May 05, 2010

எவரெடி உலகம் ஏன் எதற்கு ?

ஆன்ம உலகில் அலைந்து திரிந்தேன்
அவனிட்ட கட்டளையால்
அவணி பக்கம் தலைகாட்ட‌
அதோ உடம்பென்னும் குதிரை ரெடி

ஆறு மாதம் காத்திருந்து
அடுத்தடுத்து முழுமை பெற‌
அன்னதானக் கொடியும் ரெடி

தாயிடமிருந்து குதித்ததுமே
தொப்புள் கொடி துண்டிப்பால்
வீறிட்ட சோகம் காய்வதற்குள்
தாய்ப்பால் ரெடி

தாய்ப்பாலும் மறுக்கப் பட்டு
தரையிலே கிடத்தப் பட்டால்
தட்டேந்தி சோறூட்ட‌
தாயாதிகள் ரெடி

எழுந்து நடக்கையிலே
தாமாகவே உண்டு உடுத்திப்
பழகியதன் பின்
த‌மக்குக் கீழ் உள்ளோருக்கும்
திரவியம் தேட திசைகள் ரெடி

அடித்துப் பிடித்து
ஆலாய்ப் பறந்து
அனுபவித்து முடித்து
அடுத்த கட்டம்
தாவுவதற்குள்
தாவு தீருவதற்குள்
சாவும் சங்கும் ரெடி

இதெல்லாம்
பரிணாம வளர்ச்சியா
இல்லை படைத்தவனின்
பரிவுக்கு சாட்சியா

சொல்லுங்களேன்

Sunday, May 02, 2010

மதம் பிடிப்பதேன் மார்க்க பந்துக்கு

சிக்னல்கள் மூன்று
செய் செய்யாதே மற்றும்
இடைப்பட்ட பாதகமில்லா
வாழ்வின் விருப்பங்கள்

அரசு எதுவாயினும்
அரசாங்கம் அவசியமே
அன்றே கொல்ல அன்று
ஒழுங்கு காக்கப்பட வேணுமே என்று

நிறக்குருடும்
பிடித்த கலர்க் கண்ணாடி
வழி பார்வையும்தாம்
மனிதம் போற்றும் மார்க்கத்தையும்
மதம் பிடிக்க வைத்தன

யானைக்கு மதம் பிடித்தாலும்
யானையே வேண்டாமென்பதில்லை

மதத்தை வெறுப்போம் - அரச‌
ஆணையை வரவேற்போமே

Tuesday, October 23, 2007

பூதம் எனது நண்பன்

'பூதம் எனது நண்பன்' என்கிற ஒரு படம்,
சிறு வயதில் பார்த்த ஞாபகம்.நாயகன்/நாயகி
தெரியவில்லை. கதாநாயகன் விளையாட்டுப்
போட்டிகளில் முதலாவதாக வருவதற்கு பூதம்
உதவி செய்யும் ஒரு சில காட்சிகள் ஞாபகத்தில்
இருக்கின்றன.சினிமாவிலும் சரி கதைகளிலும் சரி
இப்படிப்பட்ட பூதங்கள் கண்ணாடி பாட்டில்களில்
அடைக்கப் பட்டிருக்கும். மனிதனோ விலங்கோ
தவறுதலாய் திறக்கப் போய் அவை வெளியே வந்து
நன்மை அல்லது தீமை செய்வதாகக் காட்டுவார்கள்.

தமிழில், நன்மை செய்பவைகளை 'பூதம்' என்றும்
அட்டூழியம் புரிபவைகளை 'பேய்,பிசாசு' என்றும்
அழைக்கிறோம். இவற்றை பற்றி இஸ்லாத்தில் 'ஜின்'
என்று குறிப்பிடப் பட்டுள்ளது. முஸ்லிம்கள் நன்மை
செய்பவைகளை 'நல்ல ஜின்' என்றும் தீமை
செய்பவைகளை 'கெட்ட ஜின்' என்றும் அழைக்கிறோம்.

எப்படி மனிதர்கள் மண் அல்லது SILICA வினால்
ஆனவர்களோ அது போல் இந்த ஜின் இனத்தவர்
நெருப்பு மற்றும் புகையினால் ஆனவர்கள்.
('என்ஜின்' என்ற வார்த்தை இதனால்தான்
உருவானதோ என்னவோ ?) :-)

இவைகளின் தோற்றம் பயங்கரமாக இருக்கும்.
நினைத்த தோற்றத்தில் மாறும் திறமை அல்லது
தன்மை இவைகளுக்கு உண்டு. இவற்றை அடக்கி
வேலை வாங்கும் திறமை மனிதர்களில் வெகு
சிலரிடம் உண்டு. சாத்தான் அல்லது ஷைத்தான்
இந்த இனத்தைச் சார்ந்தவன்தான்.

இந்தப் பதிவு எழுதும் எண்ணம் ஏன் ஏற்பட்டதென்றால்,
சில நாட்களுக்கு முன் சாத்தான் சம்பந்தமாக
ஓசை செல்லா கருத்து கேட்க சுப்பையா வாத்தியார்

'சாத்தான்' என்பதெல்லாம் கிடையாது என்று
சொல்லியிருந்தார். 'சாத்தானை' அடக்க இறைவனால்
முடியாதா ? என்ற கேள்விக்கான பதிலென்று நினைக்கிறேன்.

அப்படியல்ல, ஒவ்வொரு டைரக்டரும் தமது படத்தில்
'வில்லன்' கேரக்டரை வைத்திருப்பார்கள். அதுபோல்
சாத்தானுக்கு சந்தர்ப்பம் கொடுத்த இறைவன் கையில்
சாட்டையையும் வைத்திருக்கிறான்.
சமயம் வரும் போது சகலத்திற்கும் பதில் கிடைக்கும்.

இன்பம்/துன்பம், இறப்பு/பிறப்பு, இரவு/பகல்,
சுவர்க்கம்/நரகம் என எல்லாவற்றையும் இரட்டையாகப்
படைத்த இறைவன் நல்ல சக்தி / தீய சக்தியைப்
படைத்து தனது கற்பனைப் படி நடாத்துகிறான்.

கதா பாத்திரங்களை நம்பி ஏமாந்து போகாமல்
டைரக்டரான இறைவனின் திறமைகளை உணர்ந்து,
அவனைப் புகழ்ந்து, அவனது எண்ணத்தைப் புரிந்து
வாழ்பவர்களுக்கே 'சுவனம்' என்னும் 'விருது'.

அவனை நம்புபவர்களும் சரி நம்பாதவர்களும் சரி,
CLIMAX வரை பொறுத்துக் கொள்ளவும்.