Showing posts with label திருவள்ளுவர். Show all posts
Showing posts with label திருவள்ளுவர். Show all posts

Monday, October 11, 2010

திருவள்ளுவர் நபியா இல்லை கவிஞரா

‍‍‍
இது ஒரு ஆராய்ச்சிப் பதிவல்ல மாறாக ஒரு எண்ணவோட்டப் பதிவு.
மனிதர்கள் வாழ்ந்த எல்லாப் பகுதிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேலாக தீர்க்கதரிசிகள்
அனுப்பப் பட்டுள்ளனர் என்பது இஸ்லாம் கூறும் உண்மை. இந்தியப் பகுதியின் மிகப்
பெரிய நபியாக 'மஹா நுவு' என்றழைக்கப்பட்ட நூஹ்(அலை) என்பது தெரிய வருகிறது.
இது பழைய வேதப் புத்தகங்கள் என அழைக்கப் படும் ரிக்,சாம‌,யஜூர் மற்றும் அதர்வண வேதங்களில் காணப்படும் 'வெள்ளப் பிரளயம்', பைபிள் மற்றும் குர்ஆனிலும் விவரிக்கப் பட்டுள்ளதன் மூலம் கிடைத்த ஒரு அனுமானம்.

பழைய வேதப் புத்தகங்களை 'சுஹுபுகள் (ஏடுகள்)' எனவும், மூசா (Moses),தாவூது (David),
ஈசா (Jesus),முகம்மது (அலை) நபிகளுக்குக்குக் கொடுக்கப் பட்டவை நான்கு வேதப் புத்தகங்களாகவும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இவை பற்றிய ஆராய்ச்சிப் புத்தகங்கள்
'அபூ ஆசியா' போன்றோரால் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. எனினும் இந்தப் பதிவு எழுதத் தூண்டியது, இயல்பான நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரரான 'இதயம் பேத்துகின்ற'
பதிவர் ஜவஹரின் முயற்சியில் உருவான 'உருப்படு' புத்தக அறிமுகப் பதிவுக்குக் கொடுக்கப் பட்ட தலைப்பு ஏற்படுத்திய சிந்தனை.

ஒழுக்க நெறி கருத்துக்களுக்காகவும் சீரிய சிந்தனைகளுக்காகவும் திருவள்ளுவரையும்,
புத்தரையும் நபியாகக் கருதுவோரும் மறுப்பவரும் நம்மிடமுண்டு. பள்ளிக்கூடங்களில்
மனப்பாடம் செய்த குறள்கள் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ சினிமாப் பாடல்களில்
வந்தவை மட்டும் சரியாக நினைவில் இருக்கின்றன. அதில் ஒன்றுதான்,
'பல்லாண்டு வாழ்க' வில் வரும் 'ஒன்றே குலமென்று பாடுவோம் ஒருவனே தேவனென்று போற்றுவோம்' பாடலின் ஆரம்ப வரிகள்,

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்'
'என்பும் உரியர் பிறர்க்கு'

'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
'மெய்வருத்தக் கூலி தரும்'

திருவள்ளுவரை நபியாகக் கருதிய நான், 'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்'
என்ற வரியைச் சிந்தித்த போது 'தெய்வத்தால் கூட செய்ய முடியாத காரியத்தை ஒரு
மனிதனின் முயற்சி செய்து விடும் என்ற அர்த்தம் தொனித்ததால் 'நிச்சய‌மாக இவர்
நபியாக இருக்க முடியாது' என்ற முடிவுக்கு வந்தேன். பின்னொருநாளில் இந்தக்
குறளுக்கு யாரோ ஒருவர் இப்படி கருத்துரை எழுதியிருந்த‌தைப் படித்த போது
'அட இது நல்லாருக்கே' எனத் தோணியது.

"தெய்வத்தின் விதியில் இவனால் முடியாது என்று எழுதப்பட்டு இருந்தாலும்,
இறையிடம் அழுது பிரலாபித்து விதியை தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முடியும்",

இக் கருத்து நம் ஹதீஸ்களில் காணப்படும்,

'தர்மம் தலை காக்கும்' (சதகா ரத்துல் பலா)
'பிரார்த்தனை விதியை மாற்றும்' (துஆ ரத்துல் களா)

கருத்துக்களுக்கு ஒட்டி வருவதால் மேற்கண்ட குறளின் மீது மீண்டும் ஒரு பிடிப்பு வந்தது.
மேலும் 'அகர முதல‌ எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' எனும் குறளில் வரும்
ஆதி பகவன் என்பது ஆதம் நபியைக் குறிப்பதாகக் கருத இடமுண்டு. எனவே திருவள்ளுவர்,
நபியாக இருக்கலாம் அல்லது 'வேதங்களை'த் தொகுத்த வியாச முனிவரைப் போல் ஒரு
அறிஞராக இருக்கலாம் அல்லது நல்ல கருத்துகளைத் தொகுத்து வெண்பா வடிவில் வழங்கிய கவிஞராக இருக்கலாம் அல்லது ... அல்லது ..... அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

'அபூ ஆசியா'வின் புத்தகத்தில் படித்த ஞாபகம், குர் ஆனில் 'துல் கிஃப்ல்' என்ற நபியின்
பெயர் வருகிறது. லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களில் வெறும் 25 நபிமார்கள் பெயர்
குர்ஆனில் வருகிறது, அவற்றுள் ஒன்று 'துல் கிஃப்ல்'. கபிலைச் சார்ந்தவர் என்று பொருள்.
இது 'கபில'வஸ்துவைச் சார்ந்த புத்தரைக் குறிப்பதாகச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆக இவர்கள் நபிமார்களா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை
(தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம்). என்றாலும் தசாவதாரி சொன்னது மாதிரி,

'நபியாக இருந்தால் நன்றாயிருக்கும்' :)