அனுப்பப் பட்டோம். பயணத்தினூடே சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள
'குத்தாஹ்'வின் ஆளுநர் ஜபலா பின் அய்ஹாம் கஸ்ஸானியை முதலில்
சந்தித்தோம். அவன் அரியாசனத்தில் அமர்ந்தவாறே சிலரை எங்களிடம்
பேசுவதற்கு அனுப்பி வைத்தான். நாங்கள் சொன்னோம்,
'இறைவன் மீது ஆணையாக, அரசனிடம் பேசுவதற்காக மட்டுமே அனுப்பப்
பட்டுள்ளோம். அவனிடம் அனுமதித்தால் வந்த விஷயத்தைப் பற்றிப் பேசுவோம்.
அனுமதி இல்லையென்றால் வந்த வழி திரும்பி விடுவோம். இதனையறிந்த ஜபலா
தன்னிடம் வருவதற்கு அனுமதி அளித்தான். அவன் அருகில் சென்ற எங்களைப்
பார்த்து, 'ம்,சொல்லுங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்' என்றான்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜபலாவை அழைத்தேன். கறுப்பு நிற ஆடை
அணிந்திருந்த ஜபலா, 'நான் ஏன் கறுப்பு நிற ஆடை அணிந்திருக்கிறேன் என்று
தெரியுமா. முஸ்லிம்களாகிய உங்களையெல்லாம் இந்த சிரியாவை விட்டு
விரட்டியடிக்காதவரை கருப்பு நிற ஆடையைத் துறக்கப் போவதில்லை என்று
சபதம் செய்திருக்கிறேன்' என்றான்.
அதற்கு நாங்கள் 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்த நகரம் மட்டுமல்ல முழு நாடும்
எங்களுக்குக் கீழ் வரப் போகிறது இன்ஷா அல்லாஹ். இதைப் பற்றிய முன் அறிவிப்பை
எங்கள் நாயகம்(ஸல்) அவர்கள் முன்பே அறிவித்திருக்கிறார்கள். இதனைக் கேட்ட ஜபலா,
'நீங்களல்ல அம்மக்கள், எம் நாட்டை எவர்கள் கைப்பற்றுவார்கள் என்றால் அவர்கள்
பகலிலே நோன்பு வைத்து இரவிலே வணக்கம் புரிவார்கள். சரி உங்களின் வணக்க
முறைகளைச் சொல்லுங்கள்' என்றவனிடம் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளின்
முறைகளைச் சொல்லச் சொல்ல அவன் முகம் கறுத்துப் போனது.
பிறகு எங்களை மன்னனிடம் அனுப்பி வைத்தான். மன்னனை நெருங்கிய பொழுது
வாயிற்காவலர்கள் 'நீங்கள் ஒட்டகத்தில் செல்ல அனுமதி இல்லை. நாங்கள் தரும்
துருக்கிக் குதிரையில்தான் உள்ளே செல்ல வேண்டும்' என்றதற்கு 'அல்லாஹ்வின்
மீது ஆணையாக, நாங்கள் வந்த ஒட்டகத்தில்தாம் வருவோம்' என்றோம். இச் செய்தி
மன்னனுக்குத் தெரிந்தவுடன் ஒட்டகத்துடன் வர அனுமதி கிடைத்தது.
சபையோர் புடை சூழ மன்னன் செந்நிறமாய்க் காட்சியளித்தான். அங்கிருந்தோர்
அனைவரின் ஆடைகள்,அங்கிகள்,விரிப்புக்கள் என எல்லாமே சிவந்த நிறத்தில்
இருந்தன. நாங்கள் அவனருகில் சென்று அமர்ந்தபோது சிரித்தவாறே சொன்னான்,
'உங்களுக்குள் சொல்லிக்கொள்ளும் முகமனை எனக்குச் சொல்வதால் ஒன்றும்
பாதகமில்லையே'. நாங்கள் சொன்னோம், 'உம்முடைய முகமன் எங்களுக்கோ
எங்களது முகமன் உங்களுக்கோ ஒத்து வராது'.
'அப்படியாயின், உங்களின் முகமன் தான் என்ன ?'
'அஸ்ஸலாமு அலைக்கும் (உன் மீது ஸலாம் உண்டாகட்டும்)'
'உங்களின் அரசனுக்கு என்ன முகமன் கூறுவீர்கள்'
'அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முகமன் தான்'
'சரி, உங்களுடைய உயர்ந்த வார்த்தை (கலிமா) எது ?' என்று கேட்க
நாங்கள் உரத்த குரலில் 'லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று
சொன்னதுதான் தாமதம் அரண்மனையின் மேல் பகுதி ஒன்று இடிந்து விழுந்தது.
அதனைப் பார்த்த அதிர்ச்சியுடன் அரசன் கேட்டான் 'இந்த வார்த்தையை நீங்கள்
ஒவ்வொரு முறை கூறும்போதும் ஏதாவது இடிந்து விழுகிறதா'
'இல்லை இது போல் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை, உம்முடைய விஷயத்தில்தான்
இவ்வாறு நடைபெறக் கண்டோம். அதற்கு மன்னன், 'அடடா, ஒவ்வொறு முறையும்
இந்தக் கலிமாவை நீங்கள் மொழியும் போது உங்கள் அனைவரின் தலையிலும் ஏதாவது
விழுந்து நீங்களெல்லோரும் அழிந்து போக வேண்டாமா என்று ஆசைப் படுகிறேன்' என்று
சொன்னதன் பின் ஏதோ யோசித்தவனாக,
'சரி, உங்களின் நோன்பு மற்றும் வணக்க வழிபாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள்' என்று
கேட்டான். நாங்களும் அவை பற்றி விளக்கிச் சொன்னோம். அவன் எங்களை மூன்று
நாட்கள் தங்க வைத்து உபசரித்தான். ஒரு நாள் இரவில் ஆளனுப்பி எங்களை அவனிடம்
அழைத்து வரச் செய்தான்.....
(இன்ஷா அல்லாஹ் தொடரும் )
டிஸ்கி :
நபியவர்களின் முன்னறிவிப்புக்களில் ஒன்று, தஜ்ஜால் (anti christ) வருவதற்கு முன்
முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இக் கலிமாவை மொழிவார்கள். இதன் காரணத்தால் யூதர்கள் ஒளிந்திருக்கும் கோட்டையின் சுவர் இடிந்து தரை மட்டமாகும்.
