Showing posts with label மனம். Show all posts
Showing posts with label மனம். Show all posts

Monday, December 06, 2010

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்

உலகமே உன் வசம்தான்; போராட வேண்டிய அவசியமே இல்லை.

உலக வரைபடத்தைத் தாறுமாறாகக் கிழித்து ஒரு பள்ளி மாண்வனிடம் கொடுத்து
அதனை மீண்டும் சரியான முறையில் இணைக்குமாறு சொல்லப்பட்டபோது
முதலில் திகைத்துப் பின் சரியான முறையில் பொருத்தினான், எப்படித் தெரியுமா?.

கிழிக்கப்பட்ட ஒரு பகுதியின் பின்புறத்தில் மனித உறுப்பின் ஏதோவொரு பாகம்
தெரிய வர முதலில் மனித உருவத்தைச் சரியான முறையில் இணைத்து ஒட்டிய
பின் திருப்பினால் 'உலகம் மீண்டும் சீர் பெற்றது' :).

மனிதன் எப்படியோ உலகம் அப்படியே.
மனிதன் சீர்பெற்றால்தான் மற்றெல்லாம் சீர்பெறும். மனிதன் இந்த உலகத்தின்
உள்ளமாகும். மனிதன் திருந்த வேண்டுமென்றால் அவன் மனம் திருந்த வேண்டும்.
மனதை இயக்கும் நம்பிக்கை சரியாக வேண்டும். நம்பிக்கையில் உறுதி வேண்டும்.
உள்ளம் கெட்டுப் போன மனிதர்கள் வாழும் உலகம் குழப்பம்...அழிவு...பேரழிவுக்கு
உள்ளாகும்.

உள்ளமே உடலின் அரசாங்கத்தை ஆட்சி செய்யும் அரசனாகும். ஆசை, அரசனின்
துணைவி;அரசாங்கத்தின் ராணி. கோபம் படைத் தலைவராகும். ஆசை ராணியையோ
கோபப் படைத் தலைமையையோ அரசுக்கட்டிலில் அமர்த்தாமல் தாமும் 'குடி'முழுகிப்
போகாமல் அறிவு மந்திரியின் ஆலோசனைக் கேட்டு அன்பாகத் தாமே நடாத்தி வந்தால்
உடல் என்னும் நாடு உருப்படியாக வாழும்.

உள்ளத்தைத் திருத்துவதற்கு முன் அதன் இருப்பிடம்,தன்மை
பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஆமா மனசு எங்கேதான் இருக்கு ?

இதயம் என்பது இருதயம்தான் என்று நம்பி வந்தோம்,
இல்லை மூளைதான் என்கிறார்கள் இன்று வந்தோர்.
உறுதியாகச் சொல்ல யாரும் இல்லை சென்று வந்தோர்.

இதுவே இன்னும் சரியாகத் தெரியவில்லை, இன்னும் ஆத்மா,ஆன்மா,உயிர்,ஆவி,
கனவு,அறிவு,நுண்ணறிவு,பகுத்தறிவு என்று நமக்குள்ளே இருக்கும் ஆச்சர்யங்கள்
பற்றி எப்பொழுது தெளிவாக அறிவோமோ தெரியவில்லை.

'எவர் தம் ஆத்மாவை அறிந்தாரோ அவர்(தம்) இரட்சகனை அறிந்து விட்டார்'
என்றும்
'இறை நம்பிக்கையாளரின் உள்ளம் இறைவனின் ஆட்சிப் பீடம்'
என்றும் சொல்லப் படுகிறது.

உள்ளத்தின் சக்தியை அதன் Capacity ஐ இன்னும் நாம் உணரவில்லை.

எல்லாவற்றிற்கும் ஒரு Capacity/Limit உண்டு. இவ்வளவுதான் தாங்க முடியும் என்று.

ஆனால் உள்ளம் அப்படி கிடையாது. என்ன வேண்டுமானாலும் நினைக்க முடியும்
எங்கு வேண்டுமானாலும் துரிதமாகச் செல்ல முடியும் (மனோவேகம்). உதாரணமாக
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நான் உயிரோடு இருக்கும் வரைக்கும்
உணவளிப்பேன் என்று நினைத்துப் பாருங்கள்.

'சாரி இது டூ மச், நம்மால முடியாது'ன்னு உள்ளம் உடனே வெடித்து விடாது :)

உள்ளத்திற்கு உதாரணமாய் நிலத்தைச் சொல்லலாம் அல்லது குளத்தைச் சொல்லலாம்,
பார்வை,கேள்வி,பேச்சு,சிந்தனை ஆகிய ஆறுகளின் சங்கமம் என்றும் சொல்லலாம்.
கணிணி மொழியில் CPU வில் உள்ள control unit போல என்றும் சொல்லலாம்.

மனிதனை முன் மாதிரியாக வைத்துத்தான் கணிணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
Artificial Intelligence ஐ நோக்கி முன்னேறுவதும் மனிதனை அடிப்படையாக
வைத்துத்தான்.

உடலில் சதைத்துண்டு உண்டு அது சீர்பெற்றிருந்தால் முழு உடலும் நலம் பெறும்.
அது சீர்கெட்டுப் போனால் முழு உடம்பும் சீர்கெட்டுப் போகும். அது தான் உள்ளம்
என்று அருமை நபி(ஸல்) சொல்லியிருக்கிறார்கள்.

அந்த சதைத்துண்டு எதுவென்று உறுதியாகத் தெரியவில்லை. இதயமாகத்தான்
இருக்கும் என்பது எமது அபிப்ராயம், அதுதான் மனித பிறப்பின் உருவாக்கத்தில்
துடிக்கும் முதல் உறுப்பு. அதையே இன்றைக்கு மாற்றி விடுகிறார்களே
என்று சிலர் வாதிடும் போது இப்படியும் எண்ணத் தோன்றுகிறது.

தலைமைச் செயலகத்திற்கான பழைய கட்டிடத்தை இடித்துவிட்டுப் புதிய கட்டிடம்
கட்டினாலும் அங்கு மீண்டும் குடிவந்து ஆட்சி செய்யும் அரசைப் போல‌ இருதயத்தை
மாற்றினாலும் சக்தி மீண்டும் அங்கே அமர்ந்து ஆட்சி செய்கிறது.

'அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா?
(அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும்,
(நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்)
கண்கள் குருடாகவில்லை எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள்
(அகக் கண்கள்)தாம் குருடாகின்றன.' (அல் குர்ஆன் 17:46)

குர்ஆனிலும் 'நெஞ்சத்தில்' என்றுதான் வந்திருக்கு. அதனால‌ மனசு நெஞ்சுலதான்
இருக்கு. நாம் நம் எதிரில் இருக்கும் நபரிடம் 'உன்/உனது/உன்னை/உன்னிடம்'
என்று சொல்லும்போது ஆட்காட்டி விரலால் அவர் முகத்தை நோக்கிச் சுட்டுகிறோம்.
அதே சமயம் 'நான்/எனது/என்னை/என்னிடம்' என்று சொல்லும்போது மட்டும் நம்
நெஞ்சைக் குறி பார்க்கிறோமே அது ஏன் ?

'நெஞ்சுக்குள்ளே....நெஞ்சுக்குள்ளே..'