Wednesday, December 29, 2010

இரண்டு விதமான‌ அப்ரோச்சும் ஆறாம் அறிவும் கூடவே நன்றியும்

நண்பர்கள் வைத்துக் கும்மியும் ஓட்டுக்களும் பெறும் இவ்வலையுலகில்
கேம்பெய்ன்,மார்க்கெட்டிங் டெக்னிக் ஏதும் செய்யாத நம்மையெல்லாம் எங்கே
கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல்
இருந்து வந்தேன். ஆனால் ஆச்சர்யம் எனது மூன்றில் இரண்டு இடுகைகள்
அடுத்த கட்டத்திற்குத் தாண்டியுள்ளன. ஓட்டுப் போட்டவங்க நல்லாயிருக்கணும்.

தமிழ்மணத்திற்கும், இதுவரை ஓட்டளித்தவர்களுக்கும் இனி ஓட்டளிக்க
இருப்பவர்களுக்கும் எனது மனமார நன்றியும் துஆக்களும்.

எனது பதிவுகள் ஆன்மீகம் பகுதியிலும், பொருளாதாரம் பகுதியிலும்
உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

அடுத்தக் கட்ட ஓட்டளிப்பிற்கான பூத் இங்கே

------------------------------------------------------

இனி பதிவுக்கு வருவோம்...

ஒரு நாட்டின் மன்னன் அன்று ஒரு அறிவிப்புச் செய்தான், அதாவது நாளை
அரண்மனைக்கு வருபவர்களுக்குப் பொற்கிழியும்,சன்மானமாமும்
தரப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. அடுத்த நாள் மிக நீண்ட கியூ.
கியூவில் நிற்பவர்களுக்குக் கிடைக்கும் அரசரின் புன்சிரிப்பையையும்
மரியாதையையும் பார்த்த மன்னனின் மகன் தானும் போய் நின்று கொண்டான்.

அவனது முறை வந்ததும், அதுவரை புன்சிரித்து வந்த மன்னனின் முகம்
மாறியது. இங்கு வந்து நின்றதற்கானக் காரணம் கேட்டான்.

'கியூவில் நிற்பதால் தேவையானவை கிடைத்து மகிழ்ச்சியோடு திரும்பிச்
செல்லும் மக்களைப் பார்த்தவுடன் எனக்கும் ஆசை வந்தது'.

மகனின் இந்தப் பதிலைக் கேட்டுக் கோபப்படுவதா இல்லை வருத்தப் படுவதா
என்று குழம்பிய மன்னன் சொன்னான்,

'மகனே, இந்த நடைமுறை பொது மக்களுக்கானது. உனக்குரிய முறை
எதுவென்றால் உனக்கு எந்தத் தேவையாயினும் என்னிடம் நேரடியாகவே
கேட்பதுதான். அதுதான் எனக்கும் பிடித்தமானது'.

இந்தக் கதைக்கும் அரசியலுக்கும் முடிச்சுப் போட்டு விடாதீர்கள் மக்களே :-)

இது கதையோ அல்லது உண்மையோ, நான் சொல்லப் போகும் சில
விஷயங்களுக்கு இதனை இங்கு உதாரணமாகப் பயன் படுத்தப் போகிறேன்.

இறைவன் என்னும் அரசனுக்குக் கீழுள்ள மக்களை இரண்டு விதமாகப்
பிரிக்கலாம். ஒன்று ஆன்மீக வாதிகள் (இளவரசன் போன்றவர்கள்)
மற்றொன்று நான்மீக வாதிகள் (பொது மக்கள்).

ஆன்மீகத்தில் நம்பிக்கையற்ற அனைவரையும் (அது முஸ்லிம்களாயினும் சரி)
நான்மீகவாதிகளில் சேர்த்துள்ளேன்.

ஆன்மீகவாதிகளில் இரு வகை, ஒருவர் சரியான இலக்கில் பயணித்து
இறைவனை அறிந்தவர்/அறிபவர். மற்றவர் ஆன்மீக வழியில் பயணப்பட்டுப்
பின் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து வழிகெட்டுப் போனவர்கள்.

ஷைத்தானின் மெயின் எதிரிகள் ஆன்மீக வாதிகள். அவர்களை வழிகெடச்
செய்வதுதான் அவனின் மிகப் பெரிய புராஜக்ட்,பிளானிங்,முயற்சி எல்லாம்.
நிற்க இது இப்படியே இருக்கட்டும்.

இறைவன் இளவரசனான ஆன்மீக வாதிகளிடம் எதிர் பார்ப்பது குழந்தைத்
தனத்தை. குழந்தை எப்படி எல்லாவற்றிற்கும் அம்மாவை அழைக்கிறதோ
அல்லது எதிர்பார்க்கிறதோ அது போல அடியார்கள் எல்லாத் தேவைகளுக்கும்
இறைவனின் பக்கம் முன்னோக்குதலையும் முடுகுதலையும் விரும்புகிறான்.

மன்னன் எங்ஙனம் இளவரசனுக்காக கஜானா அத்தனையும் திறந்து விடத்
தயாராக இருக்கிறானோ அது போல இறைவன் ஆன்மீக வாதிகளுக்காக
அத்தனையும் திறந்து தரக் காத்திருக்கிறான்.

போனில்லாமல் பேசலாம், டி.வி இல்லாமல் பார்க்கலாம், மக்களின் மனதைப்
படிக்கலாம், அடுத்து நடைபெறப் போகும் விஷயங்களை ஓரளவு விளங்கிக்
கொள்ளலாம், கனவின் விளக்கத்தை அறியலாம், நினைத்ததைப் பெறலாம்,
பிறருக்காகவும் பெற்றுத் தரலாம். ஆனால் வேடிக்கை என்னவென்றால்
உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு இறைவனைத் தவிர வேறு யாரின்
மீதும் அல்லது எதுவின் மீதும் ஆசையோ ஆர்வமோ இருக்காது. :-‍)

ஆறாம் அறிவு பற்றிய பிரணாவ் மிஸ்ட்ரியின் வீடியோ பார்த்திருப்பீர்கள்.
மவுஸ்லெஸ் ஆபரேஷனும் ஒரு பொருளை வாங்கலாமா வேண்டாமா
என்று அது தரும் சிக்னலை வைத்து முடிவு எடுப்பது இன்னும் என்னென்ன
விஷயங்கள். உண்மையில் அவரது முயற்சி வியக்க வைக்கிறது என்றாலும்
அது நான்மீக வாதிகளுக்குப் பிரயோசனம் தரும் கண்டு பிடிப்பென்றாலும் அது
பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தானது. மட்டுமல்ல ஒவ்வொன்றுக்கும்
ஒரு கருவி என்று போனால் நாளை ஒவ்வொருவரும் (குப்)பைகள் தொங்கும்
மரம் போல கருவிகள் தாங்கிய மனிதனாகத் தான் அலைய வேண்டியிருக்கும்.

ஆன்மீக வாதிகளுக்கு முயற்சியின்றியே தேவைப்படும் பணம் கிடைக்கும்.
பணமின்றியே பொருள் கிடைக்கும். பொருளின்றியே தேவைகள் நிறைவேறும்.
பொதுமக்களைப் போல கஷ்டப்பட்டு உழைக்கத் தேவையில்லை. ஆனால் ஒரு
கண்டிஷன் அவர்கள் இளவரசனுக்குப் பின்னால் உள்ள பொறுப்பைப் போல
இறைவன் ஆன்மீகவாதிகளிடம் எதை விரும்புகிறான் என்பதை அறிந்து
அதனை நிறைவேற்ற வேண்டும்.

'அல்லாஹும்ம க்ஹிர்லீ வக்ஹ்தர்லீ (இறைவா எனக்கான‌ சிறந்ததை(நல்லதை)
நீயே தேர்ந்தெடுத்துத் தருவாயாக) என்ற துஆவே போதுமானது, அது பொருள்
வாங்குவதாய் இருந்தாலும் சரி, (ஜோசியம் பார்க்காமலேயே) சிறந்த துணை
தேடுவதாய் இருந்தாலும் சரி இன்னும் நிறைய விஷயங்களுக்குப் பயன்படும்
ஒரு அப்ளிகேஷன் அல்லது சப்ளிகேஷன்.

இதற்கான தேவை காசோ,பணமோ,திறமையோ அல்ல நம்பிக்கை மட்டுமே.




டிஸ்கி :

இதைப் படித்தவுடன் சரியென்று தோன்றினால் அல்லது மெலிதான புன்னகை
தோன்றினால் நீங்கள் ஆன்மீகவாதிகள். இதற்கு மாற்றமாக ஒரு ஏளனப்
புன்னகை,சிரிப்பு அல்லது கடுப்பு தோன்றினால் நீங்கள் நான்மீக வாதிகள் :)))

வஸ்ஸலாம்.

11 comments:

ஹுஸைனம்மா said...

படிச்சதும், “அரபுத்தமிழானந்தா”ன்னு பட்டம் கொடுக்கலாம்னு தோணுது!! :-))

//இறைவா எனக்குப் பொருத்தமானதை
நீயே தேர்ந்தெடுத்துத் தருவாயாக) என்ற துஆவே போதுமானது//

ம்ம்.. நானெல்லாம் எதுவேணுமோ, அதை ஸ்பெஸிஃபிகேஷனோட சொல்லி, அது வேணும்னு சொல்லிட்டு, அப்புறம் அதையே எனக்கு நன்மையானதாக்கியும் தான்னு கேக்கிற ஆள்!! :-))))

அரபுத்தமிழன் said...

//அரபுத்தமிழானந்தா //
ஆஹா, பேரு சூப்பரா இருக்கு ஹுசைனம்மா.

//அப்புறம் அதையே எனக்கு நன்மையானதாக்கியும் தான்னு கேக்கிற ஆள்!//
அடேங்கப்பா! நீங்க எப்படிப்பட்ட ஆளு.

ஆன்மீகக் கடலின் எந்தத் தீவில் நிற்கிறீர்கள் :-)

அரபுத்தமிழன் said...

இந்தப் பதிவும் சரி, இதற்கு முன்பு ஒரு பதிவும் இன்ட்லியில் இணைந்தது ஆனால் வெளியாகவில்லை. யோசித்துப் பார்த்ததில் இரண்டு பதிவுகளிலும் 'தமிழ்மண'ம் என்ற வார்த்தை வந்திருப்பதாலோ என்ற சந்தேகம் வருகிறது.

வேறு யாருக்கும் இது போல் நடந்ததுண்டா, அல்லது தமிழ்மண'ம் என்ற வார்த்தை ஃபில்டர் செய்யப் பட்டுள்ளது ஏற்கெனவே கண்டறியப்பட்ட உண்மையா.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும்... சகோ.அரபுத்தமிழன்...

ஆழ்ந்து சிந்தித்து எழுதி உள்ளீர்கள். அருமை.

//ஆன்மீகம்-நான்மீகம்//--அடா.. அடா...அடா..!

//ஆன்மீகத்தில் நம்பிக்கையற்ற அனைவரையும் (அது முஸ்லிம்களாயினும் சரி)நான்மீகவாதிகளில் சேர்த்துள்ளேன்.// --எப்படி?

பதில்:
//ஆன்மீகவாதிகளில் இரு வகை, ஒருவர் சரியான இலக்கில் பயணித்து இறைவனை அறிந்தவர்/அறிபவர். மற்றவர் ஆன்மீக வழியில் பயணப்பட்டுப்பின் ஷைத்தானின் வலையில் வீழ்ந்து வழிகெட்டுப் போனவர்கள்.//--இப்படி..! (சூப்பர்..!)

ஆனால்...

"ஒட்டகத்தை கட்டிவிட்டு அல்லாஹ்விடத்தில் தவக்கள் வை" எனும் இஸ்லாத்தில்...//ஆன்மீக வாதிகளுக்கு முயற்சியின்றியே தேவைப்படும் பணம் கிடைக்கும்.//--அதெப்படி?

ஆன்மீகவாதிகள் முயற்சி செய்துதான் தீரவேண்டும்... அதன் பலனை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும். இப்போது.. //இறைவா எனக்குப் பொருத்தமானதை நீயே தேர்ந்தெடுத்துத் தருவாயாக//--எனும்போது, இறைவன் நமக்கு அது நன்மை பயக்குமேயானால் அம்முயற்சிக்கு பலனளிப்பான். அதைவிட நன்மையான வேறு ஒன்றை நாடி இருப்பானேயானால், அம்முயற்சி தோல்வி அடையும். நாம் வேறு ஒரு வெற்றியில் முடியும் முயற்சியை எடுப்பதற்காக...

அரபுத்தமிழன் said...

அன்பின் ஆஷிக்,
முயற்சி செய்யக்கூடாதென்ற அர்த்தத்தில் சொல்லப் படவில்லை.
தேவைப்படும் உதவி தேவையான நேரத்தில் கிடைக்கும் என்பதுதான்.

மூன்று விஷயங்கள் வெற்றிக்கான காரணிகள்.
1.எண்ணம் 2. முயற்சி 3.துஆ


மனிதனுக்கும் இறைவனுக்குமிடையேயான தொடர்பை மூன்று விதமாக விளக்கப்படுத்தியுள்ளார்கள் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள்.

1. வக்கீலுக்கும் பிரதிவாதிக்குமுள்ள தொடர்பு,
2. தாயுக்கும் குழந்தைக்குமான தொடர்பு
3. பிரேதத்திற்கும் அதனைக் குளிப்பாட்டுபவருக்குமான தொடர்பு.

நன்றி ஆஷிக் வருகைக்கும் கருத்திற்கும்.

Unknown said...

நல்லா எழுதியிருக்கீங்க.. நல்ல பதிவு..

அரபுத்தமிழன் said...

நன்றி பாபு

pichaikaaran said...

இதை படித்ததும் எனக்கு சிரிப்பும் தோன்றவில்லை . கடுப்பும் வரவில்லை . தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறதே என்ற மலைப்புதான் ஏற்பட்டது.

அரபுத்தமிழன் said...

//'மலை'ப்புதான் ஏற்பட்டது//
ஆன்மீகத்திற்கும் நான்மீகத்திற்கும் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்
மலையாக இருக்கிறீர்கள் நண்பா, நீங்கள் பாதை அமைத்தால்
(நீங்கள் கற்று எடுத்துச்சொன்னால் ஒருவேளை நான்மீகவாதிகள்
ஆன்மீகத்திற்குள் அடியெடுத்து வைக்க முடியும், ஆனால் தாங்களோ
அதிகமாக இலக்கிய போதை ஏற்ற 'சாறு(ரு)' பிழிகிறீர்கள் :‍)) Jokes Apart.

//தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறதே//

இந்த அரைகுறை அரபுத்தமிழனின் நோக்கமே
இன்னும் அறியும் ஆவலைத் தூண்டுவதுதான் :)

ஸாதிகா said...

இதற்கான தேவை காசோ,பணமோ,திறமையோ அல்ல நம்பிக்கை மட்டுமே.

சகோ இதனைப்படித்து விட்டு சிரிக்க வில்லை.மனம் நிறைந்து புன்னைகைத்தேன்.நன்றி!

அரபுத்தமிழன் said...

சந்தோஷம் சகோ,
அல்லாஹ் நம்மை நேர்வழியில்
நடாத்துவானாக, ஆமீன்.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)