அச்சொல்லில் தேன் சேர்ப்பதறிவு'
புத்திமதி சொல்லப் படும் போது பிடிக்கலன்னா, 'ஓ(ன்) வேலயப் பாத்துக்கிட்டு
போய்யா'ன்னு புரியிற மாதிரி தமிழ்ல சொல்லாம, நாகரிகமா,ஸ்டைலா
வெள்ளக்காரன் மாதிரி நம்ம மக்கள்ஸ் இப்படி சொன்னது ஒரு கா..ல..ம்.
இப்பல்லாம் அட்வைஸ் எங்க கிடைச்சாலும் பிடிக்காட்டிக் கூட காது கொடுத்து
கேட்பது மட்டுமல்ல தன்னுடைய கருத்தையும் அங்கே பதிவிக்க நினைக்கும்
பிளாக்கர் காலம் இது.
சென்ற உம்ராவின் போது எனக்கும் நண்பனுக்குமிடையில் நடைபெற்ற உரையாடல்.
கஃபாவை வலம் வருவதற்காகச் சென்ற நேரமது.கீழே ஆண்களும் பெண்களும் கலந்த
கடுமையான கூட்டமாக இருந்ததால் மாடியில் தவாஃப் செய்ய நேரிட்டது.
மாடியில் தவாஃப் செய்யும்போது அங்கங்கே பெண்கள் பகுதியைக் கடக்க நேரிடும்
போது பெண்களின் பேச்சுக்குரலும், ஓதும் சப்தமும் அதிகமாகக் கேட்டது.
அப்போது நண்பன் கேட்டான்,
'சத்தத்துக்கு என்னா அரபியில'
'சவ்த்'னு சொல்வாங்க, எதுக்கு கேக்குற?
இல்ல, இங்க பெண்கள் சத்தம் அதிகமா இருக்கு, சத்தம் போடாதீங்கன்னு
அரபியில சொல்லத்தான். 'south maafee'னு சொல்லவா ?
'south maafee'ன்னா 'சத்தமேயில்லை(இன்னும் நல்லா சத்தம் போடுங்க)ன்னு அர்த்தம்'.
பின்ன எப்படி கேட்கிறது, 'சவ்த் லேஷ்' (ஏன் சத்தம்) என்று கேட்கவா அல்லது
'சவ்த் மா இரீது' (சத்தம் தேவையில்லை) என்று சொல்லலாமா ?
எனக்கும் சரியான சொல்லாடல் தெரியாததால், இங்க பாரு டைரக்டா சொல்றதா
இருந்தா, 'உஸ்குத்' (வாய மூடு)ன்னு சொல்லலாம், ஆனா அடுத்த நிமிஷம்
செருப்போ அல்லது போலிஸோ பறந்து வரும், எதுக்கு வம்ப வெலைக்கு வாங்குறே.
இல்லப்பா, யாராவது சொன்னாத்தானே, அவங்களுக்கும் புரியும்.
இங்க பாரு, இந்த மாதிரி சொல்றதுக்குன்னே 'முதவ்வா'க்களை அரசாங்கம் வச்சிருக்கு.
இது அவங்க வேலை. மாத்திரமல்ல, சட்டம் கொண்டு அல்லது சாட்டை கொண்டு
தகாதவைகளைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையதல்ல, மாறாக அது இஸ்லாமிய
அரசாங்கத்தின் கடமை. தனி மனிதனுக்கு, அவனுக்குக் கீழுள்ளவர்களைச் சத்தம்
போட்டுத் திருத்த அனுமதி உண்டு. இருந்தாலும் மென்மையான முறையில்
செய்யப்படும் அறிவுரைகள் தாம் நீண்ட நாட்களுக்குப் பலன் தரும். காரணம்
'மென்மையில் பரக்கத்(அபிவிருத்தி) இருக்கிறது'.
உன் பேச்சு எடுபட வேண்டுமென்றால், 'இறைவனின் இல்லத்தில் சத்தமிடாமல்
இருப்பவருக்கு அல்லாஹ் கிருபை செய்வானாக' என்கிற தொனியில்
உன் உபதேசம் இருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் தனி மனிதனிலிருந்து அரசாங்கம் வரைக்கும் ஒவ்வொருவரும்
எப்படி நடக்க வேண்டும் என்று காட்டித் தந்திருக்கிறார்கள்.
ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள்.
ஒரு முறை நபியின் மீது கடும் வெறுப்பு கொண்ட நிராகரிப்பாளர் ஒருவர், நபியை
ஒரு முறை பார்த்து விடும் எண்ணத்தில் மதீனா நோக்கி வந்தார்.வரும் வழியில்,
இருவர் சத்தமாக உரையாடுவதைக் கண்டு என்னவென்று அறிய எட்டிப் பார்த்தார்.
ஒருவர் ஏதோ விற்றுக் கொண்டிருக்க இன்னொருவர் வாங்குவதற்காகப் பேரம்
பேசிக் கொண்டிருந்தார்.
இவர் எட்டிப் பார்க்கும் நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, 'இந்தாளைக்
கண்டிப்பவர் யாருமில்லையா' என வாங்குபவர் போவோர் வருவோரிடம் முறையிட,
நபியைக் காண வந்தவர், 'அநியாயம் செய்யும் இந்த விற்பனையாளன்தான் நபியாக
இருக்கும்' என்று கணித்து அவரோடு சண்டையிட நினைக்கும் சமயத்தில், மிக
அழகான ஒருவர் அவ்விருவரை நோக்கி நெருங்குவதைக் கவனித்தார்.
அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'யாரசூலுல்லாஹ், இந்த ஆள் அநியாய விலை
சொல்கிறான்' என்று புகார் செய்ய, வியாபாரியை நபியென்று தவறாக எண்ணியவர்,
இப்போது நபி என்ன செய்யப் போகிறார் என்றரிய அருகில் வந்து கவனிக்கலானார்.
நபி சொன்னார்கள்,
'நல்ல பண்போடு வியாபாரம் செய்பவர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'
'நல்ல பண்போடு பொருளை வாங்குபவர் சுவர்க்கத்தில் என்னோடு இருப்பார்.'
'விற்பவரும் திருப்தி அடைந்து வாங்குபவரும் திருப்தி அடையும்
வியாபாரம்தான் மிகச் சிறந்த (பரக்கத்துகள் பொருந்திய) வியாபாரம்'.
வந்தவர் அசந்து விட்டார். இவ்வளவு சிம்பிளா,மென்மையாய்,அன்பாய்
எவ்வளவு பெறுமதியான விஷயத்தைச் சொல்லி விட்டார். யாரையும் கண்டிக்க
வில்லை, ஆனால் இருவரையும் ஒற்றுமைப் படுத்தி விட்டது அல்லாமல் மனித
சமுதாயத்திற்கே 'நல்ல வியாபார உத்தி'யைக் கற்றுத் தந்து விட்டாரே,
இவரல்லவா மனிதர் என்றவாறு நபியின் கை பற்றி மன்னிப்புக் கேட்டு
இஸ்லாத்தைத் தழுவினார் (ஹயாத்துஸ்ஸஹாபா).
(ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)