Thursday, May 25, 2017

ஆடிய பாதமும் பாடிய வாயும் ...

சமீபத்தில் படித்த கதையின் சுருக்கம், இதற்கு முன் பலரும் படித்திருக்கலாம், காரணம் மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்கப்பட்ட ஆங்கில நாவல். 
(புத்தகத்தின் பெயரை யார் முதலில் சொல்லுகிறார்கள் எனப் பார்ப்போம்).

கதையின் நாயகன் ஒரு ஆட்டிடையன். ஒரு நாள் ஆடுகள் மேய்த்துவிட்டுத் திரும்பும் வழியில் ஒரு சிதிலமடைந்த சர்ச்சில் தங்க நேரிடுகிறது. அன்று ஒரு கனவு காண்கிறான், எகிப்திலுள்ள பிரமிடுக்குப் பக்கத்தில் அவனுக்கான புதையல் இருப்பதாக. இப்போது அந்தக் கனவை இரண்டாம் அல்லது மூன்றாம் முறை காண்கிறான். நீண்ட யோசனைக்குப் பிறகு கனவை நனவாக்க உறுதி பூண்டு புறப்படுகிறான் ஸ்பெயினிலிருந்து எகிப்து நோக்கி.

இரண்டு வருட பயணத்தில் சில சிரமங்களையும் சில முக்கியமான 
படிப்பினைகளையும் பெற்று இதோ இப்போது பிரமிடுக்கு முன்னால் 
நின்று கொண்டிருக்கிறான்.

கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிகிறது. 'பிரமிடுக்கு அருகில் உனது கண்ணீர்த் துளிகள் எங்கு விழுமோ அந்த இடத்தில்தான் புதையல் இருக்கிறது' என்று கனவில் சொல்லப் பட்டசெய்தியும் நினைவுக்கு வந்து மனம் துள்ளிக் குதித்தது. கண்ணீர் விழுந்த இடத்தைத் தோண்ட‌ ஆரம்பிக்கிறான்.

நீண்ட நேரம் தோண்டியும் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் பின்னால் அரவம் கேட்டுத் திரும்ப, அங்கே அவனை நோக்கி சில வீரர்கள் வந்து கொண்டிருந்தனர். கொண்டு வந்த செல்வத்தைப் புதைக்க முயற்சிப்பதாய்க் கூறி அவனை அடித்து உதைத்து இன்னும் தோண்டச் செய்தனர்.

எவ்வளவு தோண்டியும் எதுவும் இல்லாத்தைக் கண்டு மீண்டும் விசாரித்ததில் 
'புதையல் மற்றும் கனவு' பற்றிய உண்மையைச் சொல்லிவிடுகிறான்
இதைக் கேட்டதும் இடம் அதிர இடி போல சிரித்த கூட்டத்தலைவன்
'அட முட்டாளே, கனவை நம்பி கஷ்டப் பட்டு விட்டாயடா, இதே இந்த இடத்தில் இரண்டு வருடத்திற்கு முன் நானும்தான் கனவு கண்டேன்,  

'ஸ்பெயின் தேசத்துப் பெருவெளியின் ஒரு பாழடைந்த சர்ச் ஒன்றில், ஆட்டிடையர்கள் அசந்து ஓய்வெடுக்கும் கொட்டடியின் கீழ் மிகப் பெரும் புதையல் இருப்பதாக, நான் என்ன உன்னைப் போல் முட்டாளா இதற்காகக் கஷ்டப்பட்டு பயணம் செய்வதற்கு ?!

இதற்குப் பின் என்ன நடந்திருக்கும் ?

'இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய்  ....     ஞான தங்கமே’ பாட்டு ஞாபகத்திற்கு வந்திருக்குமே.


                              *                      *                       *                     *                       *


இப்படித்தான் ஆனது என் கதையும். பிளாக்கில எழுதுறத விட்டுட்டு வாட்ஸ் ஆப்,  
முகநூல் என்று அலைந்து திரிந்து, அங்கே வந்ததைப் படிக்கவே நேரம் 
போதவில்லை ;  எழுதுவதற்கு எங்கே நேரம்அப்படியே எழுதினாலும் 
'ஏம்பா இது ஒன்னோடதுதானா இல்ல மண்டபத்துல யாராவது எழுதிக்கொடுத்து 
அதை ஃபார்வேர்ட் பண்ணியதாங்குற டவுட்டு வேற.

என்னதான் சுவாரசியமா இருந்தாலும் அவையெல்லாம் ஒரு நாள் கூத்துதான். மின்னி மறையும் நட்சத்திரங்கள் என்பதா இல்லை ஈசல்கள் என்பதா. ஆனால் BLOG அப்படியல்ல எத்தனை வருடங்கள் சென்றாலும் இன்றைக்கும் இங்கு வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். சரியோ, தவறோ, சிரிப்போ, புலம்பலோ, முன்பு எழுதப் பட்டவைகள் இன்றும் படிக்கப் படுகின்றன.

ஆடிய பாதமும் பாடிய வாயும் தட்டச்சிய கைகளும் சும்மாவே இருக்காது. ஆகையால் அவ்வப்போது இங்கேயும் தலை காட்ட ஆவல்.

முன்பிருந்த ஆர்வம்,  திறமை குறைந்து விட்டாலும் பரவாயில்லை,  

" நமக்கான புதையல் இங்குதான் இருக்கிறது "    :)
                                                                                                                         

5 comments:

Unknown said...

மகிழ்ச்சி unkalai nerla parkuradu maadiri irundhuchu ---Siddique

Yaathoramani.blogspot.com said...

அருமையான கதையை
வலைத்தளத்துடன் இணைத்தவிதம்
அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

அரபுத்தமிழன் said...

சந்தோஷ நன்றி சித்தீக் :)

அரபுத்தமிழன் said...

ஊக்கப் படுத்திய ஆக்கபூர்வமான பின்னூட்டத்திற்கு
நன்றிகள் பல ரமணி சார்

அரபுத்தமிழன் said...

நண்பர்கள் பார்வையாளனனின் பதிலையும் (நாவலின் பெயர்) ஹுஸைனம்மாவின் ரசிக்கும் படியான கேலியையும் எதிர் பார்த்துக்
காத்திருக்கிறது இந்தப் பதிவின் பின்னூட்டப் பெட்டி.

Post a Comment

நுனி நாக்கில் சர்க்கரை தேவையில்லை

எனினும்

" கனியிருப்பக் காய் கவர்ந்தற்று " :)