இஸ்லாத்தில் மூன்று பள்ளிகள் புனிதமானவை 1.கஃபத்துலாஹ் (மக்கா),
2.மஸ்ஜிதுன் நபவி (மதீனா), 3.பைத்துல் முகத்தஸ் (ஜெருசலம்). அதற்காக
மற்றப் பள்ளிகள் புனிதமற்றவை என்று அர்த்தமல்ல. அவை மூன்றும் முதல்
அந்தஸ்த்தில் உள்ளவை. கஃபத்துலாஹ் ஆதம் நபியால் கட்டப்பட்டு
இப்ராஹீம் (Abraham) நபியால் மீண்டும் புனரமைக்கப்பட்டது. மதீனாப் பள்ளி
முகம்மது (ஸல்) மற்றும் அவர்களது நபித்தோழர்களால் கட்டப்பட்டது.
ஜெருசலம் பள்ளி தாவுது (David), சுலைமான் (Solomon) நபிகளால் கட்டப்பட்டது.
மற்றப் பள்ளிகள் அவ்வப்போது தொழுபவர்களின் தேவைக்கேற்ப கட்டப்பட்டு வந்தன,
இனியும் கட்டப்படும். ஆனால் தர்காக்கள் ஏன்,யாரால் கட்டப்பட்டன என்ற விவரம்
தெரியவில்லை. இனியும் கட்டப்படாது என்றே நினைக்கிறேன். அது தொழப்படும்
பள்ளியுமல்ல, இறைவனின் ஆலயமுமல்ல மாறாக அது வெறும் அடக்கஸ்தலம்தான்.
பிறகு ஏன் மக்கள் அங்கே செல்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இங்கேதான்
தவ்ஹீதுவாதிகளும் தரீக்காவாதிகளும் பிரிகிறார்கள். இருவரும் பேசிக்
கொள்வதைக் கேட்போமா.
தவ்ஹீது : நீங்கள் ஏன் தர்காவுக்குச் செல்கிறீர்கள், அது பாவமாச்சே.
தரீக்கா :
பாவமென்று யார் சொன்னது, மரணத்தை நினைவூட்டுவதால் அடக்கஸ்தலம்
செல்லுமாறு நபிகளே சொல்லியிருக்கிறார்களே.
தவ்ஹீது :
நீங்களெல்லாம் அதற்காகச் செல்வதில்லை, அங்கு அடங்கி இருப்பவரிடம்
உங்கள் தேவைகளைக் கேட்கச் செல்கிறீர்கள்.
தரீக்கா :
கேட்பதால் என்ன தவறு, டாக்டரிடம் சென்று காண்பிப்பது போலத்தான் இதுவும்.
தவ்ஹீது : டாக்டர் உயிரோடு உள்ளவர் அவரோ மரணித்தவர்.
தரீக்கா :
இறை நேசர்கள் உயிரோடு இருக்கிறார்கள் மரணிக்கவில்லை என்று இறைவன்
தன் திருமறையில் கூறியிருக்கின்றானே.
தவ்ஹீது :
அது நபிமார்களைப் பற்றிச் சொன்னது. மேலும் இறைவன் யாரை நேசிக்கிறான்
என்பது அவனுக்குத் தானே தெரியும்.
தரீக்கா :
அது இன்னொரு இறைநேசருக்கும் தெரியும், அவர் முலமாக எங்களுக்கும் தெரிய வரும்.
தவ்ஹீது :
அப்படிப்பட்ட இடைத்தரகர் எங்களுக்குத் தேவையில்லை. தன்னிடமே நேரடியாகக்
கேட்குமாறு இறைவன் சொல்கிறான்.
தரீக்கா :
தந்தையிடம் நேரடியாகக் கேட்க வெட்கப்பட்டோ அல்லது பயப்பட்டோ தாய்
மூலம் கேட்கும் பிள்ளையைப் போல் நாங்கள் அவ்லியா மூலம் கேட்கிறோம்.
தவ்ஹீது :
இந்த உதாரணமெல்லாம் இறைவனுக்கு ஒத்து வராது. அவ்லியாக்கள் எல்லாம்
இறைவனுக்கு மனைவியா. நீங்கள் பகிரங்கமாக இணை வைக்கிறீர்கள். பாவிகள்.
நீங்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர் விளங்கிக் கொள்கிறாரா அதுவும் ஒரே
சமயத்தில் எல்லோருடைய தேவைகளையும் கேட்க முடிகிறதா. நிச்சயமாக நீங்கள்
இறைவனின் தன்மைகள் அவரிடமும் இருப்பதாகக் கருதுகிறீர்கள். உங்களின் இந்த
நிலை மக்கத்துக் காபிர்களின் நிலையை ஒத்திருக்கிறது. படைத்தது யார் என்று
கேட்டால் ‘அல்லாஹ்’ என்று சொன்னார்கள், பிறகு ஏன் இந்தச் சிலைகளை
வணங்குகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது அல்லாஹ் ஒருவனால்
எல்லாவற்றையும் செய்ய முடியாது. அதனால்தான் அவைகளிடம்
எங்கள் தேவைகளைக் கேட்கிறோம் என்று சொன்னார்கள்.
தரீக்கா :
அடப்போங்கப்பா, வயதுக்கு வராதவனுக்கு தாம்பத்ய இன்பம் எப்படித் தெரியும்.
தர்காக்கள் பற்றி அறிய வேண்டுமென்றால் ஒரு ஷைகிடம் (சூஃபி அறிஞர்)
முரீதாக (மாணவனாக) பைஅத் (ஒப்பந்தம்) செய்து கொண்டு பயிற்சி பெற்றால்தான்
தெரிய வரும். பைஅத் சம்பந்தமான ஹதீஸ்களைப் பாருங்கள். பைஅத் பெறாமல்
மோட்சம் கிடையாது என்பதை அறிவீர்கள்.
தவ்ஹீது : பைஅத்தாம், மோட்சமாம் போங்கய்யா நீங்களும் உங்க ....
இப்படிப் போகிறது இருவருக்குமிடையேயான சம்பாஷணைகள். இன்னும் லாஜிக்கலா
கிளைக் கேள்விகளும் கிளை பதில்களும் உண்டு. நாம் என்ன முடிவுக்கு வருவது :(.
-------------------------- * * * * * -------------------------
இணை வைத்தலில் பல வகைகள் உண்டு. சூரியன், சந்திரன், நட்சத்திரம் அடங்கிய
பிரபஞ்சங்களின் மீது நம்பிக்கை வைப்பது. உயிருள்ள மிருகங்கள், பறவைகள்,
மனிதர்கள், ஜின்கள் மீது நம்பிக்கை வைப்பது. உயிரற்றவர்களின் மீதும், கற்களின்
மீதும், நாடு, அரசாங்கம், இனம், குழு, எண்ணிக்கை, படை பலம், Technology,
கல்வி, அறிவு இன்னும் தன் மீதும் நம்பிக்கை வைப்பது அனைத்தும் இணை
வைத்தலில் கொண்டு போய்ச் சேர்க்கும். இவைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
பெரிய ஷிர்க் மற்றும் சின்ன ஷிர்க். நபியவர்களுடைய ஒரு ஹதீஸின் கருத்தாவது,
‘எனது உம்மத்து (சமுதாயம்) சிலை வணக்கம் போன்ற பெரிய ஷிர்க்கில் விழுவார்கள்
என்பதை விடச் சிறிய ஷிர்க்கில் வீழ்ந்து கிடப்பார்களே என்றுதான் அஞ்சுகிறேன்’.
குர்ஆனிலும் இது பற்றி வந்திருக்கிறது.
(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும் கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித்
தவிக்கும் சமயத்தில்) எங்களை இதைவிட்டுக் காப்பாற்றிவிட்டால், நிச்சயமாக நாங்கள்
நன்றி செலுத்துவோரில் ஆகி விடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள்
அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகிறவன் யார்?.
இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக்
காப்பாற்றுபவன் அல்லாஹ்வே பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே.
நபியே!) நீர் கூறும், உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய
கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும் அல்லது
உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை
அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள்
விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி)
விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. (6: 63 - 65)
மேலும் அவர்கள் மரக்கலங்களில் ஏறிக்கொண்டால், அந்தரங்க சுத்தியுடன் சன்மார்க்கத்தில்
வழிப்படடவர்களாக அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர்; ஆனால், அவன் அவர்களை
(பத்திரமாகக்) கரைக்கு கொண்டு வந்து விடுங்கால், அவர்கள் (அவனுக்கே)
இணை வைக்கின்றனர். (29:65)
யோசித்துப் பார்த்தால் நம்முடைய பேச்சிலும் செயலிலும் எத்தனை ஷிர்க்குகள் செய்து
வருகிறோம். மழை, காற்று, புயல், சுனாமிகளின் போதும், சம்பாத்தியம், வாழ்வாதாரம்,
பாதுகாப்பு, எதிர்காலம் பற்றிய பேச்சு,செயல்களின் போதும் நாம் எப்படி நடந்து
கொள்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.
இறைவனின் கூற்று,"அடியான் என்னைப் பற்றி எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறே
நானும் நடந்து கொள்கிறேன்" (பதிவைப் புரிந்து கொள்ள இதுவொன்றே போதும்).
-------------------------- * * * * * -------------------------
ஊரில் இருக்கும்போது ஒருமுறை எனது செல்ஃபோன் தொலைந்து விட்டது. எனது
உறவினர் பெண்மணி ஒருவர், எங்களூரில் வசித்து இறந்து போன ஒரு முதியவரின்
பெயரைச் சொல்லிக் கேட்டால் தொலைந்த பொருள் கிடைத்து விடும் என்று வேண்டிக்
கொண்டார். நானோ அந்த வம்பே வேண்டாம் என்று நபியவர்கள் காட்டித் தந்த இரண்டு
ரக்அத் தொழுது துஆ செய்தேன். செல்ஃபோன் கிடைத்தது. எனக்குத் தொழுகையின்,
துஆவின் மீது நம்பிக்கை பிறந்தது. அந்த உறவினருக்கும் அவரைச் சார்ந்த
பெண்களுக்கும் மறைந்த ‘அப்பாவின்’ மேல் நம்பிக்கை உயர்ந்தது. :)
ஒருமுறை மழை பெய்த போது நபியவர்கள், 'அல்லாஹ்வின் நாட்டத்தின் படி மழை
பொழிந்தது என்று சொன்னவர்கள் இறை நம்பிக்கையை அடைந்து கொண்டார்கள்,
மாறாக குறிப்பிட்ட நட்சத்திரத்தின் நகர்வின் காரணமாக மழை பொழிந்தது என்று
சொன்னவர்கள் இறை நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்கள்' என்று சொன்னார்கள்.
ஆக உலகத்தில் நடைபெறும் அத்தனையும் இறைவனின் விதிப்படியே நடக்கின்றன.
இந்த நிகழ்வுகளிலிருந்து என்ன நம்பிக்கையைப் பெறுகிறோம் என்பதைத்தான் நாம்
கவனிக்க வேண்டும். இது பரீட்சைக் கூடம், பலவிதமான சோதனைகள் இருக்கும்.
ஒருமுறை ஹஜரத் அலீ அவர்கள் போரிடுவதற்காகப் புறப்பட்டார்கள். இந்த நேரத்தில்
புறப்பட்டால் அலீ தோற்றுப் போவார், ஏனென்றால் நேரம் சரியில்லை என்று ஒரு குறி
சொல்லும் ஜோதிடன் சொன்ன விஷயம் அலீ(ரலி) அவர்களிடம் சொல்லப் பட்டது.
அதற்கவர்கள் ‘மஷ்வரா (ஆலோசனை) செய்து முடிவெடுத்த நேரத்தை மாற்ற
முடியாது, தோற்றாலும் பரவாயில்லை என்று கிளம்பினார்கள். அதாவது உலக
வெற்றி தேவையில்லை, மறுமையின் வெற்றிக்கான ஈமானைப் பாதுகாப்பதுதான்
முக்கியம் என்பது இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.
கஸ்ஸாலி என்றொரு அறிஞர் சொல்கிறார், சிலர் பாம்பைப் பிடித்து அதிலிருந்து
விஷத்தை எடுத்து விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதைப் பார்த்த சிலர் பாம்பைப்
பிடிக்கும் வித்தையைக் கற்காமலே அதில் ஈடுபடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாய்
முடியும். அது போலவே உலக வாழ்வின் தத்துவம், தாத்பரியம், விஷம் அறியாது
அதனைச் சேகரிக்க நினைப்பவர்களின் ஈமான் ஆபத்தில் இருக்கிறது. உயிர் பெரிதா
ஈமான் பெரிதா, ஈமான் பெரிதென்று நினைப்பவர்கள் நிச்சயம் ஒவ்வொரு
ஸ்டெப்பையும் கவனமாகத்தான் வைப்பார்கள்.
மரணச் சமயத்தில் ஈமானைப் பறிப்பதற்கு ஷைத்தானின் முயற்சி கடுமையாக
இருக்கும். தவ்ஹீதுவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு
தரீக்காவாதிகளை ட்விஸ்ட் செய்யும் கேள்விகளும் அவனிடம் உண்டு எனும்போது
பொதுமக்களின் நிலைமையை என்ன சொல்வது. காலமெல்லாம் ஈமானுக்காகப்
பாடுபட்டவர்களும் இறையச்சமுள்ள நல்லடியார்களும் அவனின் சூழ்ச்சியிலிருந்து
பாதுகாக்கப் படுவார்கள். ஆனால் பொதுமக்களோ ‘கண்டதே காட்சி கொண்டதே
கோலம்’, என்ற அறியாமையிலும் ‘நமக்கு வேண்டியது எங்கேர்ந்து கெடச்சா என்ன’
என்ற சுயநலத்திலும் உழன்று தம் உயிரினும் மேலான ஈமானை மரணத்திற்கு
முன்பே பறிகொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
-------------------------- * * * * * -------------------------
தரீக்காவாதிகள் ‘ஷைகு’ என்ற குருநாதரின் கண்காணிப்பில் இருப்பவர்கள். குர்ஆன்,
ஹதீஸை எப்படி அணுக வேண்டும் என்ற 'மெய்ஞ்ஞானம்' குருநாதரால் போதிக்கப்
படுபவர்கள். கஸ்ஸாலி என்ற அறிஞர் (சூஃபி) தரீக்காவாதியான பின்புதான் நல்ல
இஸ்லாமியத் தவ்ஹீது கருத்துக்களைத் தாங்கிய புத்தகங்களைப் படைத்தார் என்றும்
தரீக்காவில் இணைவதற்கு முன் தாம் எழுதிய புத்தகங்களெல்லாம் குப்பை என்று
உணர்ந்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவருடைய வரலாறு கூறுகிறது. அவருடைய
தவ்ஹீதுக் கருத்துக்கள் இன்றைய தவ்ஹீதுவாதிகளால் கூட புரிந்து கொள்ள முடியாத
அளவுக்கு நுணுக்கமானதாக இருக்கும். ஆனால் அக்காலத்தில் இருந்த ஷைகுகள்
போன்று இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.
ஷைகிடம் பைஅத் செய்வது பாதுகாப்பாய்த் தெரிந்தாலும் தவறான ஷைகைத்
தேர்ந்தெடுத்து விட்டால் அதோ கதிதான். அதுபோல நாம் தேர்ந்தெடுத்த நல்லவர்
ஷைத்தானுக்கும் நல்லவராகி விட்டால் அவ்வளவுதான், ஓட்டு மொத்தக் கூட்டமும்
ஸீதா ஜஹன்னம்தான் (நேரா நரகம்தான் :). ஆதலால் தர்காவின் தாத்பர்யம் தெரிய வேண்டுமென்றால் யாராவது நல்ல ஷைகைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவர்
கிடைக்காத பட்சத்தில் தவ்ஹீதுவாதிகளாக இருங்கள். குறைந்த பட்சப் பாதுகாப்பாவது
கிடைக்கும். ஈமானியப் பாதுகாப்பு வளையமின்றி அங்கு செல்வது ஆபத்தானது.
தர்கா இஸ்லாத்தின் அம்சம் என்றால் அது இஸ்லாம் செல்லுமிடமெல்லாம்
அதுவும் செல்லவேண்டும். அனால் அது இணைவைப்பாளர்கள் வாழ்ந்த,வாழும்
இந்தியத் துணைக் கண்டத்தில்தான் அதிகம் காணப படுகின்றன. ஒருவேளை
இணை வைப்பாளர்களான மனிதன் மற்றும் ஜின்களால் வைக்கப்படும் மாந்திரீகத்
தொல்லைகளை முறியடிப்பதற்காகவே இவை அமைக்கப் பட்டதாக இருக்கலாம்.
அல்லது அல்லது பிஸினெஸ்ஸுக்காக உருவானதோ இல்லை இணைவைத்தலில் ஈடுபடுத்துவற்காகவே ஷைத்தான்களால் உருவாக்கப் பட்டதோ தெரியவில்லை.
அல்லது ஒரு இஸ்லாமிய அறிஞரை எவ்வாறு நாம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து
கொள்ள, புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள அணுகுகின்றோமோ அது போலவே
ஜின்களும் அவர்களை அணுகிப் பாடங்கள் படிக்கின்றன, நாளடைவில் அவருக்குச்
சீடராகி மனமுவந்து சேவைகள் செய்கின்றன். அந்த அறிஞர் மரணித்த பின்னும்
அவரிடத்திலே தங்கி அங்கு வரும் மக்களுக்குச் சேவை செய்கின்றனவோ ..
இன்னும் எந்த மூலிகையில் என்ன நிவாரணம் உண்டு என்பதை அறிந்து
வைத்துக் கொண்டு அங்கு வரும் புதிர் நோய்களைக் கொண்ட நோயாளிகளைக்
குணப்படுத்துகின்றனவோ .. அல்லது மறைந்த இறைநேசர்கள் இறைவனின்
அனுமதியுடன் தமது சேவையை இன்னும் தொடர்கிறார்களோ என்றெல்லாம்
யோசிக்கத் தோன்றுகிறது. காரணம் ஆச்சர்யத்தக்க வகையில் மருத்துவ
ஆப்பரேஷன்கள் கனவிலும் மயக்க நிலையிலும் நடைபெறுவதாக அங்கு
சென்று சுகம் பெற்ற சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.
இப்படி மர்மமாகவே இருக்கும் தர்காக்களைப் பற்றி என்னைப் போன்ற ரெண்டுங்
கெட்டான்களால் என்ன எழுதி இந்தச் சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல முடியும்.
'இங்கு போவதால் என்ன தப்பு, ஏன் போகக் கூடாது' என்று சொல்பவர்கள்தாம் தர்கா
என்றால் என்ன அங்கு ஏன் போக வேண்டும் என்பது பற்றிச் சரியாக விளக்க முடியும்.
லாஜிக்கலா எதிர்கேள்விகள்தாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே ஒழிய சரியான
முறையில் அங்கு என்னதான் நடக்கின்றது என்று சொல்வதில்லை. ஆதலால்
இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
தர்காவுக்குப் போகலாம் என்று சொல்லும் நீங்கள் 'எப்படிச் சென்றால் ஈமானுக்குக்
கேடு வராது என்று அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் சொல்லித் தர வேண்டிய பொறுப்பு'
உங்களுக்கு இருக்கிறது. பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் அல்லாஹ்வைப் பற்றி அறிந்திருக்கிறார்களோ இல்லையோ அவ்லியாக்களைப் பற்றி நன்றாகவே அறிந்து
நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
"பாவம் விட்டில் பூச்சிகளாய் அங்கு வந்து வீழ்ந்து கொண்டிருக்கிறது
இஸ்லாமியத் தேனீக்களின் இறைவன் பற்றிய நம்பிக்கை"
வஸ்ஸலாம்